முதலில் அன்புச்செழியன்..அடுத்து கலைப்புலி தாணு...வருமான வரித்துறை அடுத்தடுத்து சோதனை!
சென்னை : திரைப்பட பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்த அன்புசெழியன் சினிமா பைனான்சியராக உள்ளார். இவர் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார்.
இவர் திரைப்படங்களை தயாரிப்பது, ரிலீசாகும் படத்தை வாங்கி விநியோகிப்பது மற்றும் திரைப்படத்திற்கு பைனான்சியராக இருந்து வருகிறார்.

ஜி.என்.அன்புச்செழியன்
சினிமா தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்சியர் மற்றும் தியேட்டர் அதிபர் என பல தொழில்களில் ஈடுபட்டிருப்பவர் ஜி.என்.அன்புச்செழியன். தமிழகத்தில் வெளியாகும் திரைப்படங்களில் எல்லாம் தன் தடம் இருக்க வேண்டும் என்பதற்காக எப்படியாவது படத்தை வாங்கிவிடுவார். சமீபத்தில் வெளியான தி லெஜன்ட் திரைப்படத்தின் உரிமையை அன்புச்செழியன் விநியோகம் செய்திருந்தார்.

அதிரடி ரெய்டு
இந்நிலையில், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள திரைப்பட பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் 30 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. திடீரென சினிமா பைனான்சியர் வீட்டில் வருமான வருத்துறை சோனை நடத்தி வருவது தமிழ் திரைப்பட உலகிலும், அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ 77 கோடி ரொக்கப்பணம்
இதற்கு முன் அன்புச்செழியன் வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த 2020 ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடந்தது. 77 கோடி ரூபாய் ரொக்கப்பணம், 300 கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. பிகில் படம் சம்பந்தப்பட்ட ரெய்டு நடந்த நிலையில் அதன் விநியோகஸ்தராக இருந்த இவரது வீடு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. சம்மன் அனுப்பி விசாரித்தனர். அன்புச்செழியன் வருமான வரித்துறை வரி ஏய்ப்பு செய்ததை உறுதிப்படுத்தியது. 2003ம் ஆண்டு சசிகுமார் உறவினர் மரணத்தை அடுத்து சென்னை போலீஸார் அன்புச்செழியனின் தி.நகர் ராகவய்யா அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இதுவரை 3 முறை அன்புச்செழியன் அலுவலகத்தில் சோதனை நடந்துள்ளது.

40 இடங்களில்
தற்போது சென்னையில் நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள வீடு, தி.நகர் ராகவய்யா தெருவில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. சென்னை மதுரை,தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மதுரை மேல மாசி அலுவலகம், கீரைத்துறை, தெப்பக்குளம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அன்புச்செழியனின் தம்பி அழகர் சாமிக்கு சொந்தமான நுங்கம்பாக்கம், மதுரை இல்லங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கலைப்புலி தாணு
அதே போல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தி.நகரில் உள்ள பிரகாசம் சாலையில் உள்ள கலைப்புலி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற அலுவலகத்தில் காலை 9 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் 12 பேர் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.ஆர்.பிரபுவுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











