என் உடலை தானம் செய்கிறேன்.. பிரபலம் செய்த உதவி... ஷிஹான் ஹுசைனி உருக்கம்!
சென்னை: பத்ரி படத்தில் விஜய்க்கு கராத்தே மாஸ்டராக வந்த ஷிஹான் ஹூசைனி ரத்த புற்று நோய் பாதிப்பில் இருந்து உயிருக்கு போராடி வருகிறார். இதனிடையே சமீபத்தில் வெலளியிட்ட வீடியோவில் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன். மேலும் எனது உடலை தானம் செய்கிறேன் என அவர் கூறியது அவரது மாணவர்களை மட்டும் அல்ல திரை பிரலங்களின் மனதையும் உறைய செய்துள்ளது. நோயின் பிடியில் இருக்கும் அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
மதுரையை பூர்விமாக கொண்ட ஷிஹான் ஹூசைனி கமல் நடித்த புன்னகை மன்னன் படத்தில் அறிமுகமானார். இவர், பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் நடித்த பத்ரி படத்தில் அவருக்கு கராத்தே சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராக நடித்திருந்தார். இதுவரை 400க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்து, தமிழகத்தில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாகவும் இருக்கிறார். கடந்த 2022இல் வெளியான காத்துவாக்குல 2 காதல் படத்தில் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சினிமா ரசிகர்களும் அவரது நடிப்பை பார்த்து வியந்து ரசித்தனர். இந்நிலையில் தன் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக சமீபத்தில் அவர் ஊடகங்களின் வாயிலாக தெரிவித்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கவலை இல்லை: 60 வயதாகும் இவர் ஒரு நாள் உயிர் வாழ இரு பாட்டில் ரத்தத்தை ஏற்ற வேண்டும். மருத்துவர்களும் கைவிட்டுவிட்டதாக தெரிவித்தார். பிறகு நான் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. எனது வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கிறேன் என தெரிவித்தது பலரையும் உறைய வைத்தது. மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்கும் இவருக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் உதவித்தொகை அளித்தது. அதன் பிறகு சிஹானி ஹூசைன் வெளியிட்ட வீடியோவில், துணை முதல்வர் உதயநிதி யாருக்கும் தெரியாமல் அளித்த நிதியுதவி மனதை தொட்டு விட்டது. நீங்கள் அற்புதமான மனிதர் என்பது உணர்த்திவிட்டீர்கள். உதவி செய்ததை வைத்து மலிவு அரசியல் செய்யாமல், ஒரு மனிதனின் தேவையை உணர்ந்து உதவி செய்ததற்கு நன்றி என அவர் தெரிவித்திருந்தார்.
நன்றி கெட்டவர்கள்: கொஞ்ச நாள் தான் இருப்பேன், விஜய், பவன் கல்யாணை சந்தித்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என அவர் தெரிவித்திருந்தார். ஆனால், இதுவரை விஜய் சந்திக்கவில்லை. இதனிடையே பத்திரிகையாளர் அந்தணன் கடுமையாக திரை பிரபலங்களை விமர்சித்து பேசியிருந்தார். ஷிஹான் ஹூசைனி விசயத்தில் தமிழ் சினிமா கைவிட்டுவிட்டது. நன்றி கெட்டவர்களாக மாறிவிட்டனர் என்றும் கடுமையாக விமர்சித்து பேசினார். விஜய் வந்து தன்னை சந்திக்க வேண்டும் என்று ஹுசைனி ஆசைப்படுகிறார். அப்படி விஜய் வந்து சந்தித்தால் கண்டிப்பாக தனது ஆயுள் கூடும் என்று அவர் நினைக்கிறார் என்று தெரிகிறது என்றும் அந்தணன் தெரிவித்திருந்தார்.

உடலை தானம் செய்கிறேன்: சிகிச்சையில் இருக்கும் ஷிஹானி ஹூசைன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில்,மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக என் உடலை தானம் செய்கிறேன். நான் இறந்த 3 நாள்களுக்குப் பிறகு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு என் உடலை தானம் செய்ய விரும்புகிறேன். மேலும், என் இதயத்தை மட்டும் பாதுகாக்க வில்வித்தை - கராத்தே மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதைப் படிக்கும் கல்லூரியின் அதிகாரி உடனடியாக வந்து, என் அதிகாரப்பூர்வ ஒப்புதலையும், எனது கையொப்பத்தையும் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











