கள்ளநோட்டுகளுடன் வங்கியில் சிக்கிய சினிமா நிர்வாகி!
சென்னை: வங்கியில் கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்ற சினிமா நிர்வாகியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் வங்கி ஊழியர்கள்.
சென்னை தியாகராயர் நகர் பசுல்லா ரோட்டில் உள்ள பிரபல தனியார் வங்கியில் இந்த சம்பவம் நடந்தது.
சோமசுந்தரம் என்ற சினிமா தயாரிப்பு நிர்வாகி நேற்று மாலையில் பணம் டெபாசிட் செய்ய வங்கிக்கு வந்தார்.
அவர் டெபாசிட் செய்ய முயன்ற பணத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 27 இருந்தன. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி நிர்வாகத்தினர், கள்ளநோட்டுகளையும், அதனை டெபாசிட் செய்த சோமசுந்தரத்தையும் பாண்டிபஜார் போலீசில் ஒப்படைத்தனர்.
பாண்டிபஜார் போலீசார் கள்ள நோட்டுகளை கைப்பற்றி, சோமசுந்தரத்திடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சோமசுந்தரம், பிரபல டிவி தொடர் தயாரிப்பாளரிடம் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றி வருவது தெரியவந்தது. அந்த டிவி தொடர் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர், பழம்பெரும் சினிமா இயக்குநர் மகன் ஆவார்.
போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











