Viduthalai : 'விடுதலை' பதைபதைக்க வைத்த ரயில் விபத்து காட்சி.. உருவான விதம்.. வேல்ராஜின் பேட்டி!
சென்னை : விடுதலைப்படத்தில் முதல் பத்து நிமிடம் வந்த ரயில் விபத்து காட்சி உருவானது குறித்து ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சமூக அக்கறைக் கொண்ட படங்களை இயக்கி வரும் வெற்றிமாறன், காவல் நிலையத்தில் நடக்கும் அவலங்கள் குறித்து மனம் பதைபதைக்கும் வகையில் விடுதலை என்ற படத்தை கொடுத்துள்ளார்.
இத்திரைப்படத்தில் சூரி, விஜய்சேதுபதி, ராஜூவ் மேனன், கௌதம் மேனன், சேத்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இத்திரைப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் வந்துக்கொண்டு இருக்கின்றன.

வெற்றிமாறனின் விடுதலை
விடுதலைப்படத்தின் ஒளிபதிவாளர் வேல்ராஜூக்கு பாராட்டுகள் குவித்து வரும் நிலையில், அவர் ஊடகம் ஒன்றுக்கு படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.அதில், விடுதலைப்படத்திற்கு முன்னாடி வேறு ஒரு கதையைத்தான் வெற்றிமாறன் தேர்வு செய்திருந்தார். ஆனால், திடீர் என்று தான் விடுதலை படத்தின் கதை முடிவு செய்யப்பட்டது. முதலில் இப்படம் 40 பேரு கொண்ட ஒரு சின்னப்படமாகத்தான் ஆரம்பிக்கப்பட்டது.

பெரிய பட்ஜெட் படமாக மாறியது
இதற்காக சத்தியமங்கலம் காட்டுப்பகுதிக்கு சென்று சிறிய கூடாரம் போட்டு தங்கி இருந்தோம். அங்கு ஒரு கழிவறைக்கூட கிடையாது என்பதால் 40 கழிவறைகளை நாங்களே கட்டிக்கொடுத்தோம் அதை அந்த பகுதி மக்களும் பயன்படுத்தினார்கள். இந்த படத்தின் கதையை கேட்டதுமே, நிச்சயம் இது ஒரு வெற்றிப்படமாக இருக்கும், அனைவருக்கும் இந்த படத்தின் மூலம் நல்ல பெயர் கிடைக்கும் என்று மனதிற்குள் தோன்றியது. முதலில் சிறிய திரைப்படமாக ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தில் விஜய்சேதுபதி வந்த பிறகு பெரியப்படமாக மாறிவிட்டது.

பதபதைக்கும் ரயில் விபத்து சீன்
விடுதலை படத்தில் வரும் அந்த ரயில் விபத்து காட்சி 8 நிமிடம் சிங்கிள் ஷாட்டாக எடுக்கப்பட்டது. இந்த விபத்து சீன் எடுக்கும் போது அந்த இடத்தில் ஆயிரம் பேர் இருந்தோம். ஆயிரம் பேரும் செல்போனை ஆஃப் செய்து விட்டுத்தான் வரவேண்டும் ஏன் என்றால் மிமிக்குக்கும் கேமராவுக்கும் உள்ள சிக்னல் கிடைக்காது. யாராவது செல்போனை ஆப் செய்யாமல் வைத்து இருந்தால் எங்களுக்கு சிக்னல் கிடைக்காமல் போய்விடும்.

30 நாட்கள் எடுத்தோம்
இந்த காட்சி எடுத்துக்கொண்டு இருக்கும் போது சில நேரம் கேமராவுக்கு சிக்னல் கிடைக்காமல் போய்விடும். இதனால் மீண்டும் அந்த காட்சியை எடுக்க வேண்டி வரும், அந்த காட்சியை மீண்டும் எடுக்க குறைந்தது மூன்று மணிநேரமாவது ஆகிவிடும். இந்த காட்சிக்கு மட்டும் எட்டு நாள் ஒத்திகை பார்த்தோம். ஆனால், அந்த காட்சியை எடுக்க 30 நாட்கள் ஆனது. முதல் நாள் மழை பெய்தது, பின் துணை நடிகர்கள் வரவில்லை என பல கஷ்டங்களை அனுபவித்தோம். அனைவரின் உழைப்பால் இன்று அந்த காட்சி இன்று பேசப்படுவதை கேட்கும் போது மனதிற்கு நிறைவாக இருக்கிறது.

விடுதலை 2 பயங்கரமா இருக்கும்
விடுதலை இரண்டாம் பாகத்திற்கான அனைத்து வேலைகளும் முடிந்து விட்டது, கிளைமாக்ஸ் காட்சி மட்டும் எடுக்க வேண்டி உள்ளது. அந்த காட்சிக்காக வெற்றிமாறன் பயங்கரமா பிளான் பண்ணி இருக்கிறார். அது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். முதல் பாகத்தைப் பார்த்து வியந்த ரசிகர்கள் அடுத்த பாகத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை வெற்றிமாறன் நிச்சயயம் பூர்த்தி செய்வார் என்று ஒளிப்பதிவாளர் வேல்ராஜா பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











