'வீரம்' ஓடும் தியேட்டரில் மோதல்: திருவண்ணாமலை சிலம்பரசன் குத்திக் கொலை
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வீரம் படம் ஓடும் அன்பு தியேட்டரில் நடந்த தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
திருவண்ணாமலையில் உள்ள அன்பு தியேட்டரில் வீரம் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை காட்சியின் இடைவேளையின்போது கழிவறைக்கு சென்ற இடத்தில் திருவண்ணாமலை சின்னக்கடை தெரு வாலிபர்களுக்கும், ஆடையூர்காலணி கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது திருவண்ணாமலை வாலிபர்கள் ஆடையூர்காலணியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை அடித்து உதைத்தனர். இதில் தலையில் காயம் அடைந்த அவர் நேராக தனது ஊருக்கு சென்று தனது நண்பர்களிடம் நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை அடித்தவர்களை தாக்க 10 பேர் கிளம்பி அன்பு தியேட்டருக்கு வெளியே சவுக்கு கம்புகளுடன் காத்திருந்தனர்.
படம் முடிந்து கூட்டம் வெளியே வந்தபோது ஆடையூர்காலணி வாலிபரை தாக்கியவர்களை காணவில்லை. இதையடுத்து அந்த 10 பேரும் அவர்களை தேடி அலைந்து இறுதியில் தியாகி அண்ணாமலை நகர் மேல்நிலைப்பள்ளியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தனர்.
மைதானத்தில் இருதரப்பும் மோதிக் கொண்டது. இதையடுத்து ஆடையூர்காலணி வாலிபர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதன் பிறகு தான் திருவண்ணாமலை சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த சிலம்பு என்கிற சிலம்பரசன் கத்திக்குத்து பட்டு உயிருக்கு போராடியது தெரிய வந்தது. மேலும் கோவிந்தன் என்ற வாலிபருக்கும் கத்திக்குத்து விழுந்தது தெரிய வந்தது.
உடனே அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிலம்பரசன் வழியிலேயே உயிர் இழந்தார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிந்தன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலை செய்த ஆடையூர்காலணி ஆட்கள் 6 பேரில் 3 பேரின் அடையாளம் தெரிந்துள்ளது. மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கொலையாளிகளில் ஒருவர் கல்லூரி மாணவன் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











