தனக்கென தனி முத்திரை பதித்த டைப்பிஸ்ட் கோபுவின் மறைவு திரைத்துறைக்கு பேரிழப்பு: முதல்வர் இரங்கல்!
சென்னை: பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபுவின் மறைவிற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாஸன், அஜித், விஜய் என்று மூன்று தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்து நடித்தவர் டைப்பிஸ்ட் கோபு. சென்னை ராயப்பேட்டையில் மனைவி மற்றும் இரண்டாவது மகனுடன் வசித்து வந்த அவருக்கு நேற்று திடீர் என்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

நடிகர் கோபுவின் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "பழம்பெரும் நாடக மற்றும் திரைப்பட நடிகருமான டைப்பிஸ்ட் கோபு உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணக்கால் கிராமத்தை சேர்ந்த கோபு, கே.பாலசந்தரின் நாணல் படம் மூலம் அறிமுகமாகி, இதுவரை 600க்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் பல்வேறு வேடங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பெற்றவர். இவர் மூன்று தலைமுறை நடிகர்களின் படங்களில் நடித்த பெருமைக்குரியவர்.
டைப்பிஸ்ட் கோபு நாடகத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்ற பெருமைக்குரியவர். மேலும், இவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோருடன் நடித்த பெருமைக்குரியவர். அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவரும், திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவருமான டைப்பிஸ்ட் கோபுவின் மறைவு தமிழ் திரைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும்.
டைப்பிஸ்ட் கோபுவை இழந்து வாடும் அவரது குடும்பதினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்", என முதலமைச்சர் கூறியுள்ளார்.
நடிகர் டைப்பிஸ்ட் கோபுவின் மறைவிற்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் இரங்கல் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications