பையனூர் திரைப்பட நகருக்கு ஆக 22-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் சார்பில் இது தொடர்பாக நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
"முதல்வர் கலைஞரின் கருணையினால்தான் இன்று தமிழ் திரையுலகம் செழித்து திரைப்படங்கள் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. படப்பிடிப்பு கட்டணங்களை குறைத்து, கேளிக்கை வரியை முற்றிலுமாக நீக்கி, திரைப்பட நலவாரியம் அமைத்து, திரையுலகினர் வாழ்வில் ஏற்றம் பெற செய்தவர், முதல்-அமைச்சர் கலைஞர்தான்.
இதற்கு மேலும் சிறப்பு செய்யும் விதமாக ஒட்டுமொத்த திரையுலகுக்கும், சின்னத்திரை கலைஞர்களுக்கும் சென்னை அருகே பையனூரில் வீடு கட்ட இடம் வழங்கி, இருண்டு கிடந்த திரையுலகினர் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர், முதல்-அமைச்சர் கலைஞர்தான்.
இதற்காக வருகிற 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை அருகே உள்ள பையனூரில், திரைப்பட நகரத்துக்கான வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருக்கிறது. முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த விழாவில், மத்திய செய்தி மற்றும் விளம்பரத்துறை இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, மற்றும் ஒட்டுமொத்த திரையுலகினரும் கலந்துகொள்கிறார்கள்.
இந்த இனிய விழாவில் அனைத்து தரப்பினரும் பங்குபெறும் வகையில், வருகிற 22-ந் தேதி திரையுலகில் படப்பிடிப்பு, டப்பிங் மற்றும் திரைத்துறை சம்பந்தப்பட்ட எந்தவொரு பணியும் மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதற்கு பதிலாக இந்த மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை 8.8.2010 அன்று வேலை நாளாக கடைபிடிக்க வேண்டுகிறோம். வருகிற 22-ந் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கலைஞர் நகரில் நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்..."


Click it and Unblock the Notifications











