பெயரை போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்தவர்.. மாணிக்க விநாயகம் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்
சென்னை: பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மறைவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உடல் நலக் குறைவு காரணமாக பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் இன்று மாலை காலமானார்.
சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடரும் சோகம்
இந்த 2021ம் ஆண்டில் இயக்குநர் கே.வி. ஆனந்த், நகைச்சுவை நடிகர் விவேக், பாண்டு என ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் மறைந்த சோகம் ரசிகர்களையும் பிரபலங்களையும் வாட்டி வந்தது. இந்நிலையில், ஆண்டு இறுதியில் மேலும் ஒரு அதிர்ச்சியாக பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகத்தின் மறைவு மாறி உள்ளது.

முதலமைச்சர் இரங்கல்
"பிரபல திரைப்படப் பாடகர் திரு. வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அன்பைப் பொழிந்து, பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்"

வருத்தமுற்றேன்
"பிரபல திரைப்படப் பாடகரும் நடிகருமான திரு. வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். எண்ணூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடி, துன்பமானாலும் துள்ளலானாலும் தனது குரல்வளத்தால் அவ்வுணர்வுகளைத் துல்லியமாக இரசிகர்களுக்குக் கடத்தி விருந்தளித்தவர் அவர்."

பண்பிலும் மாணிக்கம்
"அவரது தந்தை மற்றும் அண்ணனைப் போலவே, தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற அன்பைப் பொழிந்த அவர், அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், மிகுந்த அக்கறையோடு நலம் விசாரிப்பவர். பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த திரு. வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கலையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆறுதலை உரித்தாக்குகிறேன்." என முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











