அஜித் அம்மா மரணம்.. திரிஷாவுடன் ஒன்றாக வந்து ஏகேவுக்கு ஆறுதல் சொன்ன முதலமைச்சர் விஜய்
சென்னை: அஜித்தின் தாயார் மோகினி மணி வயோதிகம் காரணமாக நேற்று சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 89 ஆகும். மோகினியின் உயிரிழப்பு அஜித் குடும்பத்தினரை மட்டுமின்றி அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. துபாயில் இருந்த ஏகே; அம்மாவின் இறப்பு செய்தியை கேட்டு கலங்கியபடி நேற்றிரவு சென்னை வந்து சேர்ந்தார். அவர் வந்ததும் முதலமைச்சர் விஜய்யும், நடிகை திரிஷாவும் நேரில் வந்து ஆறுதல் கூறினார்கள்.
அஜித்தின் தந்தை சுப்ரமணியம் கடந்த 2023ஆம் ஆண்டு வயது முதிர்வு மற்றும் பக்கவாதம் நோய் காரணமாக உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை தொடர்ந்து தனது தாய் மோகினியை தன் அருகில் வைத்து பார்த்துவந்தார் அஜித்குமார். இப்படிப்பட்ட சூழலில் மோகினிக்கும் வயோதிகம் காரணமாக அவ்வப்போது உடல்நலம் சரியில்லாமல் போனது. மருத்துவர்களும் அவருக்கு தீவிரமான சிகிச்சையை தொடர்ந்து அளித்து வந்தார்கள். மருத்துவத்தின் உதவியோடு இன்னும் சில காலம் தாய் உயிரோடு இருப்பார் என்றுதான் அஜித்தும் அவரது சகோதரர்களும் நினைத்தார்கள்.

உயிரிழந்த மோகினி: ஆனால் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் எதையும் தாங்கும் சக்தியை மோகினியின் உடல் இழந்துவிட நேற்று அவர் தன் 89ஆவது வயதில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஏகே குடும்பத்தினரை உச்சக்கட்ட சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்புதான் தந்தையை இழந்திருந்தார் அஜித். இப்போது தாயையும் இழந்திருக்கும் அவருக்கு திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது ஆறுதலை கூறிவருகிறார்கள்.
சென்னை வந்த அஜித்: மோகினி உயிரிழந்தபோது அஜித்குமார் சென்னையில் இல்லை துபாயில் இருந்தார். தனது தாய் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் கலங்கிய கண்களோடு சென்னைக்கு அவர் வந்தது அனைவரது மனதையும் கனக்க செய்திருக்கிறது. மோகினியின் இறுதி சடங்குகள் அனைத்தும் சென்னை பாலவாக்கத்தில் இருக்கும் அஜித்தின் வீட்டில் நடக்கும் என்றும்; இது தனிப்பட்ட இறுதிச்சடங்காக நடக்கும் என்றும் குடும்பத்தினர் தெளிவாக சொல்லிவிட்டார்கள். பிரபலங்கள் மட்டும் மோகினியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.
முதலமைச்சர் விஜய் ஆறுதல்: அஜித்தின் தந்தை இறந்தபோது விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் தெரிவித்தார். இப்போது முதலமைச்சராகிவிட்டதால் அவர் நேரில் வருவாரா என்ற கேள்வி எழுந்தது. தன் நண்பருக்கு ஒரு சோகம் என்றால் தானும் அங்கே இருப்பேன் என்பது போல் நள்ளிரவுவாக்கில் விஜய் மாலையும், கையுமாக திரிஷாவுடன் ஒன்றாக வந்து அஞ்சலி செலுத்தி ஆறுதல் சொன்னார். அஜித்தை விஜய் கட்டியணைத்து ஆறுதல் சொல்லியதை திரிஷா சோகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். மேலும் திரிஷாவும் தன் ஆறுதலை ஏகேவுக்கு தெரிவித்தார்.
விஜய்யின் இரங்கல் குறிப்பு: முன்னதாக முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், "அருமை நண்பர் அஜித்குமார் அவர்களின் தாய் மோகினி அம்மையார் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிரேன். வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications
