டிரைவர் சீட்டில் நம்ம CM.. சிங்கப்பெண் அதிரடிப்படை காரை தானே ஓட்டி மாஸ்.. எழும்பூரில் பறந்த விசில்!
சென்னை: பெண்களின் பாதுகாப்பிற்காகத் தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' வாகனங்களை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களே நேரடியாக காரை ஓட்டித் தொடங்கி வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
சிங்கப்பெண் தொடக்க விழா: தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், பெண்களின் பாதுகாப்புக்கான 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' உருவாக்கும் ஆணை உள்ளிட்ட மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டிருந்தார். இதன் தொடக்க விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.
முதல்வர் விஜய் பேச்சு: தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு எப்போதும் முன்னுரிமை கொடுக்கும். இந்த சிங்கப்பெண் அதிரடிப்படைக்காக முதற்கட்டமாக அரசு சார்பில் ரூபாய் 350 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இதில் 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன. பெண்களுக்கு முழுப் பாதுகாப்பு தரும் வகையில் நவீன ரோந்து வாகனங்களும், அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளும் இந்த படைக்கு வழங்கப்பட்டுள்ளன என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

மீண்டும் கார் சாகசம்: விழாவின் முத்தாய்ப்பாக, சிங்கப்பெண் அதிரடிப்படை வாகனங்களின் சேவையைத் தொடங்கி வைக்க மேடையை விட்டு இறங்கி வந்தார் முதல்வர் விஜய். யாரும் எதிர்பார்க்காத வகையில், அந்த அதிரடிப்படை காரின் ஓட்டுநர் இருக்கையில் அவரே அமர்ந்து, காரைத் தானே கம்பீரமாக ஓட்டிச் சென்று இந்தச் சிறப்புப் படையின் சேவையைத் தொடங்கி வைத்தார். ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு, தலைமைச் செயலகத்தில் மருத்துவத் துறை வாகனங்களை ஓட்டுநர்களிடம் ஒப்படைப்பதற்கு முன்னதாக, அவரே காரை ஓட்டிச் சென்று சாவியைக் கொடுத்து அசத்தியிருந்தார். அதே பாணியில், தற்போதும் சிங்கப்பெண் படை வாகனத்தை அவர் அலாதியாக இயக்கிய வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி, லைக்குகளைக் குவித்து வருகிறது.
வைரலாகும் வீடியோ: பெண்களின் பாதுகாப்புக்கான திட்டத்தை முதலமைச்சரே நேரில் கார் ஓட்டித் தொடங்கி வைத்திருப்பது, பொதுமக்களிடையேயும், குறிப்பாகப் பெண் காவலர்களிடையேயும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications