மனைவிக்காக கதறிய முத்துக்காளை.. சிகிச்சைக்கு உதவிய முதல்வர் விஜய்.. இந்த மனசுதான் சார் கடவுள்!
சென்னை: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது மனைவியின் உயிரை காப்பாற்றுமாறு நடிகர் முத்துக்காளை முதல்வருக்கு கோரிக்கை வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து முதல்வர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
'பொன்மனம்' படத்தின் மூலம் சின்ன ரோலில் நடித்த முத்துக்காளை, அதன்பின் 'என் உயிர் நீதானே', 'நிலவே முகம் காட்டு' போன்ற படங்களில் நடித்தார். இப்படி சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த அவர், நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் இணைந்து 'என் புருஷன் குழந்தை மாதிரி' என்ற படத்தில் நடித்தார். அதில் இடம்பெற்ற "நாம ரெண்டு பேரும் செத்து செத்து விளையாடலாமா?" என்ற காமெடி மிகப்பெரிய அளவில் ஹிட்டானதைத் தொடர்ந்து, வடிவேலுவுடன் சேர்ந்து 'எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', 'சீனா தானா 001', 'விந்தை', 'கபாலி தோட்டம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

நடிகர் முத்துக்காளை: குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த முத்துக்காளை, அதிலிருந்து மீண்டு படிப்பில் தனது கவனத்தை செலுத்தி, பி.ஏ வரலாறு, எம்.ஏ தமிழ், பி.லிட் உள்ளிட்ட மூன்று பட்டங்களை பெற்றுள்ளார். தற்போது மீண்டும் படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வரும் முத்துக்காளையின் மனைவி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள முத்துக்காளை, தனது மனைவியைக் காப்பாற்ற வேண்டும் என தமிழக முதல்வர் ஜோசப் விஜயிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மருத்துவமனையில் மனைவி: அந்த வீடியோவில், என் மனைவி பெயர் மாலதி. வயது 47. அவருக்கு தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக, ஒரு ஆபரேஷனுக்காக சென்னை கீழ்ப்பாக்கம் கேஎம்சி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன். ஆபரேஷன் முடிந்து 17 நாட்கள் ஆகிவிட்டது. ஆபரேஷன் செய்ததன் காரணமாக நுரையீரல் தொற்று உள்ளிட்ட சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால், என் மனைவி மூச்சுவிடுவதில் சிரமப்படுகிறார். என் மனைவியின் உயிரை காப்பாற்றுமாறு தமிழக முதல்வர் ஜோசப் விஜயிடம் கோரிக்கை வைக்கிறேன் என பேசி இருந்தார்.
உதவிய முதல்வர்: இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டானதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் உடனடியாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு சிகிச்சை குறித்து விசாரிக்கும் படி கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து, மருத்துவமனை நேரடியாக வந்த அமைச்சர் ராஜ் மோகன், முத்துக்காளையிடம் சிகிச்சை குறித்து விசாரித்து, உயர் சிகிச்சை அளிக்க தேவையான உதவிகளை செய்யும்படி மருத்துவர்களிடம் பேசி உள்ளார். உடனடியாக உதவிக்கரம் நீட்டிய முதல்வர் விஜயை அவரது தொண்டர்கள் வெகுவாக புகழ்ந்து இந்த மனசுதான் சார் கடவுள் என பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications