மாணவி கொலை.. குற்றவாளியை ரயில் முன் தள்ளிவிட நீதிபதிக்கு கோரிக்கை.. விஜய் ஆண்டனியின் சர்ச்சை ட்வீட்
சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா என்பவர் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இதனையறிந்த சத்யாவின் தந்தை மாணிக்கம் மகள் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியில் தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், மாணவியை கொலை செய்த இளைஞர் சதீஷுக்கு கொடுக்கப்பட வேண்டிய தண்டனை குறித்து நடிகர் விஜய் ஆண்டனி டிவீட் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த சோகம்
சென்னை ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலர் குடியிருப்பில் வசித்து வந்த மாணிக்கம் என்பவர் கால் டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ராமலட்சுமி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தின் குற்றப்பிரிவில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களது மகள் சத்யா என்பவர் தியாகராய நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.. இந்நிலையில், அவர் சதீஷ் இளைஞர் என்ற இளைஞரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

நடந்தது இதுதான்
சத்யாவை கொலை செய்த இளைஞர் சதீஷ், காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தயாளன் என்பவரது மகன் என்பதும், அவரும் அதேபகுதியில் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் கார்கோ பிரிவில் பணியாற்றி வந்த சதீஷ் சத்யாவை ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சிலமாதங்களாகஅவர்தொடர்ந்து சத்யாவை பின் தொடர்ந்து காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். சத்யா மறுத்து வந்துள்ளார். இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார் சதீஷ். இந்நிலையில், கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு மதியம் 1 மணியளவில் சென்றுள்ளார் சத்யா, அப்போது அங்கு சென்ற சதீஷ் சத்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சதீஷ், தாம்பரத்தில் வந்துகொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தந்தை தற்கொலை
இதில் சத்யா, ரயில் சக்கரத்தில் சிக்கி, தலை துண்டித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து ஈசிஆர் பகுதியில் சுற்றித் திரிந்த சதீஷை போலீஸார் கைது செய்தனர். ஆனால், இந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் மாணவியின் தந்தை மாணிக்கம் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி கருத்து தெரிவித்துள்ள டிவீட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் ஆண்டனியின் ட்வீட்
அதில், "சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொதுமக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார். இந்நிலையில், விஜய் ஆண்டனியின் இந்த டிவீட்டர் பதிவுக்கு பலரும் விமர்சித்துள்ளனர்.

படத்துக்கு ப்ரோமோஷனா?
பொறுப்புள்ள நடிகரான விஜய் ஆண்டனி இப்படி பதிவிடலாமா? சட்டத்தை கையில் எடுக்கும் வகையிலும், நீதிமன்றத்தின் விசாரணையை அவமதிக்கும் படியும் விஜய் ஆண்டனி பதிவிட்டுள்ளது சரியான தீர்வல்ல என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இது சினிமாவை போல கிடையாது, இங்கு எதையும் திரைப்படம் போல 3 மணி நேரத்துக்குள் தீர்வு தேடிவிட முடியாது எனவும் கூறியுள்ளனர். மேலும், விஜய் ஆண்டனி தனது படங்களுக்கான ப்ரோமோஷனுக்காக இப்படி சர்ச்சையாக ட்வீட் போட்டு, ரசிகர்களிடம் கவனம் ஈர்க்கிறாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

திரைப்படங்கள் எப்படி இருக்கின்றன?
மேலும், தனது படத்திற்கு 'கொலை' என டைட்டில் வைத்துள்ள விஜய் ஆண்டனி, மற்ற படங்களையும் வன்முறை காட்சிகளுடன் தான் எடுக்கிறார். சினிமா பார்த்து இளைஞர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகின்றனர், குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது விஜய் ஆண்டனிக்கு தெரியாததா. இதையெல்லாம் பற்றி பேசாமல் சட்டத்தின் மீது நம்பிக்கையில்லாமல் இப்படி கோரிக்கைகள் வைக்கலாமா எனவும் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். அதேபோல், முன்னணி நடிகர்களின் படங்களில் காட்டப்படும் வன்முறை காட்சிகளை முதலில் விமர்சித்துவிட்டு, சட்டத்தின் மீதான குறைகளை பேசவும் என காட்டமாக கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











