விடைபெற்றார் மயில்சாமி.. ஏவிஎம் மின்மயானத்தில் உடல் தகனம்.. கண்ணீரில் திரையுலகம்!
சென்னை : நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடல் வடபழனியில் உள்ள ஏவிஎம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
57 வயதே ஆன மயில்சாமி மகா சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.
கோயிலில் இரவு முழுவதும் வழிபாடு செய்துவிட்டு, அதிகாலையில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்த, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

மாரடைப்பால் உயிரிழந்தார்
இதையடுத்து மயில்சாமியின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.நேற்று முதல் ஏராளமான பொதுமக்களும், திரைப்பிரபரலங்களும் அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து, இறுதிச்சடங்கு இன்று காலை பத்து மணிக்கு தொடங்கும் என குடும்பத்தினர் தெரிவித்து இருந்தனர்.

பூஜை செய்த மாலை
இதையடுத்து இன்று காலை இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் தொடங்கின. இதில், சிவனின் தீவிரபக்தரான மயில்சாமி உடலுக்கு சிவனடியார்கள் சிவபுராணம் பாடி மரியாதை செலுத்தினர். திருவண்ணாமலை கோவிலில் குருக்கள் பூஜை செய்யப்பட்ட வெட்டி வேர் மாலையை மயில்சாமியின் உடலுக்கு அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

வழி நெடுகிலும் பொதுமக்கள் அஞ்சலி
சிவ வாத்தியம் இசைத்தபடி மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. வாகனத்தில் மயில்சாமியின் மகன்கள் கனத்த இதயத்துடன் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் மயில்சாமியின் நெருங்கிய நண்பரான எம்.எஸ்.பாஸ்கர் கதறி அழுதபடி வாகனத்தில் அமர்ந்து இருந்தார். திரைப்பிரபலங்கள் பலர் வாகனத்தை பின் தொடர்ந்து அழுதபடி வந்தனர். வழி நெடுகிலும் பொதுமக்கள் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

விடைபெற்றார் மயில்சாமி
வடபழனி ஏவிஎம் மின்மயானத்தில் சில சடங்குகள் செய்யப்பட்டது. கடைசியாக தந்தையின் முகத்தைப்பார்த்த மகன்கள் கதறி அழுதார்கள். இதனைப் பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் கண்ணீர் மல்க அழுதார்கள். அதன் பின், மயில்சாமியின் மகன் யுவன் தந்தையின் உடலுக்கு தீ மூட்டினார். 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து மக்களை கவர்ந்த நசைக்சுவை கலைஞனின் சகாப்தம் இன்று முடிந்தது. இவ்வுலகில் சினிமா இருக்கும் வரை மக்களின் மனதில் மயில்சாமி என்றும் நிலைத்து இருப்பார்.


Click it and Unblock the Notifications











