மேடை நிகழ்ச்சியில் கடவுள்கள் பற்றி அவதூறு பேச்சு.. பிரபல நகைச்சுவை நடிகர் உட்பட 5 பேர் கைது!
மும்பை: மத்திய அமைச்சர் மற்றும் கடவுள்கள் பற்றி அவதூறாகப் பேசியதாக காமெடி நடிகர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரபல நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபாரூகி. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
இவர் ஸ்டான்ட் அப் காமெடியனாகவும் இருக்கிறார். பல்வேறு பகுதிகளில் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

சர்ச்சை கருத்து
இவர், பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசுவதை வழக்கமாக வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்தூரில் ஒரு ஓட்டலில் காமெடி நிகழ்ச்சி நடத்தினார். அவர் நகைச்சுவையாக பேசிக்
கொண்டிருந்தார். அப்போது இந்து கடவுள்கள் பற்றி அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.

போலீசில் புகார்
மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்தும் அவதூறான கருத்துகளை பேசியதாக எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து நிகழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது. முனாவர் ஃபாரூகி மீது நடவடிக்கை எடுக்கும்படி அங்குள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ மாலினி லட்சுமணன் சிங் மகன் ஏக்லவ்யா சிங் கவுர் போலீசில் புகார் அளித்தார்.

ஃபாரூகி கைது
அதோடு அவர் பேசிய வீடியோவை சமர்பித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முனாவர் ஃபாரூகியை கைது செய்தனர். அவருடன் எட்வின் அந்தோணி, பிரகார் வியாஸ், பிரியம் விகாஸ், நளின் யாதவ் ஆகியோரையும் கைது செய்தனர்.

உணர்வை தூண்டுதல்
கோவிட்-19 விதிமுறைகளையும் அவர்கள் மீறியதாகக் கூறப்படுகிறது. முனாவர் பாரூகி உட்பட கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் மத உணர்வை தூண்டுதல், கவனக்குறைவான செயலால் தொற்றுநோயை பரப்ப காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications











