காமெடியன் டூ கதாநாயகன் டிராக்.. அடுத்தடுத்து சிக்ஸர் விளாசும் சூரி.. சந்தானம் கோட்டை விட்டது எங்கே?
சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ என்று யோசிக்கும் நிலையில் தமிழ் சினிமா உள்ளது என்பதை பலரும் ஒப்புக் கொள்ளலாம். அதற்கு காரணம் வடிவேலு மற்றும் விவேக்கிற்கு பிறகு தமிழ் சினிமாவில் காமெடியன்களாக வலம் வந்த சந்தானம் மற்றும் சூரி தற்போது காமெடி டிராக்கில் இருந்து விலகி, முழுக்க முழுக்க கதாநாயகன் மற்றும் கதையின் நாயகன் டிராக்கில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதில் சூரி அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வருகிறார். அதே நேரத்தில் சந்தானம் எங்கோ ஒரு இடத்தில் கோட்டை விடுகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
சந்தானம் மற்றும் சூரி என இருவரும் தங்களது சினிமா வாழ்க்கைக்கான அஸ்திவாரத்தை கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான் தொடங்கியுள்ளார்கள் எனலாம். 2003ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானா சந்தானம். சூரி சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருந்தாலும், தொடக்கத்தில் அவருக்கு லைட் மேன் வேலை தான் கிடைத்தது. அதன் பின்னர் 2000 களில் சினிமாவில் கூட்டத்தில் ஒருவராக, பெயர் இல்லாத கதாபாத்திரங்களாக நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு வெளியான தீபாவளி படத்தில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
சின்னத்திரை டூ வெள்ளித்திரை: சந்தானத்திற்கு எப்படி விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா மிகவும் உறுதுணையாக இருந்ததோ, அதேபோல் சூரிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் உறுதுணையாக இருந்தது. ஆனால் இருவரில் சந்தானம்தான் மக்கள் மத்தியில் காமெடியன் என்ற அடையாளத்தை பெற்றார். சந்தானம் வெள்ளித்திரைக்கு வரக் காரணம், சிம்புதான். அவரது காதல் அழிவதில்லை படத்தில் நடித்திருந்தாலும், அவருக்கென தனி காட்சிகள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான சிம்புவின் வல்லவன் படத்தில் காமெடியனாக அறிமுகமானார் சந்தானம். இந்த படத்தில் இருந்து தான் சந்தானத்திற்கு வெள்ளித்திரையில் பிரேக் கிடைக்கிறது.

சந்தானம் - சூரி: தனக்கு சினிமா வாய்ப்பை வழங்கியது சிம்பு என்பதால்தான், சிம்பு அழைத்ததும் அவரது 49 வது படத்தில் காமெடியனாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சந்தானம். சூரிக்கு தமிழ் சினிமாவில் இப்படி தூக்கிவிட யாரும் இல்லை என்றுதான் கூறவேண்டும். இயக்குநர் பாலாஜி சக்திவேல், லிங்குசாமி என பலரும் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கொடுத்தனர். சூரிக்கு என தனி அடையாளத்தை பெற்றுக் கொடுத்த படம் என்றால், அது வெண்ணிலா கபடிக் குழு. கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அவருக்கு கிடைத்த அறிமுகம் இவரை திரைத்துறையினர் காமெடியனாக அங்கீகரிக்க காரணமாக இருந்தது.
இயக்குநர் ராஜேஸ்: இருவருக்குமே வெற்றிப் படங்களில் அறிமுகம் கிடைத்தாலும், அதன் பின்னரும் இரண்டாம் நிலை காமெடியனாக நடித்து வந்தார்கள். இப்படியான நிலையில் இருவரது வாழ்க்கையிலுமே மிகவும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றால் அது இயக்குநர் ராஜேஸ். எம் தான். இவரது இயக்கத்தில் வெளியான சிவா மனசுல சக்தி படத்தில் படம் முழுவதும் வரும் காமெடியனாக நடித்திருந்தார் சந்தானம். கிட்டத்தட்ட படத்தில் அவரும் ஒரு கதாநாயகன் போல தான் இருந்தார். இந்த படத்திற்கு பின்னர் சந்தானத்தின் மார்க்கெட் ரேஞ்சே மாறிப்போனது. ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என நடிகர்கள் மட்டும் இல்லாமல், பல இயக்குநர்களும் சந்தானத்திற்கு காத்துக் கொண்டு இருந்தார்கள்.

சந்தானத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், அவர் கதாநாயகர்களுடன் தனது கதாபாத்திரத்தை வடிவமைத்துக் கொண்டதுதான். இது அவருக்கு ரொம்பவே உதவியது. நகரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களில் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் பெரும்பாலும் நடித்தார். அதேபோல் கிராமத்து கதைக்களம் என்றாலே இயக்குநர்களின் முதன்மைத் தேர்வாக சூரி வந்துவிடுகிறார். இது மட்டும் இல்லாமல் சந்தானத்தின் கால் ஷீட் கிடைக்காமல் போனதும் சூரிக்கு அடித்த ஜாக்பாட். ஆனால் சூரி தான் நடித்த படங்களில் காமெடியில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வந்தார்.

சிவகார்த்திகேயன்: விஜய் டிவியில் இருந்து வந்து கதாநாயகனாக மாறிய சிவகார்த்திகேயனைப் பார்த்து, தானும் கதாநாயகனாக மாற வேண்டும் என்ற எண்ணம் சந்தானத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக சந்தானம் எங்கும் பேசியதில்லை. சந்தானம் கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து கதாநாயகனாக நடித்து வருகிறார். சந்தானம் காமெடியில் இருந்து விலகிய பின்னர் சூரி மேலும் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டார்.
ஹீரோவானாலும் காமெடியன்: சந்தானத்தின் மிகப்பெரிய பலமே காமெடிதான். இவர் தனது லொள்ளு சபா பார்முலாவை தனது படங்களிலும் அப்ளை செய்தார். அதாவது, தனக்கு மிகவும் ஏதுவான நடிகர்களை தனது படங்களில் தொடர்ந்து நடிக்க வைத்துக் கொண்டு இருந்தார். சந்தானத்தின் காமெடி படங்களுக்கு மக்கள் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தாலும், மிகப்பெரிய கவனம் ஈர்க்க கூடிய வெற்றிகளாக அவை இல்லை. சந்தானம் கதாநாயகனாக நடித்தாலும் காமெடிதான் செய்து கொண்டு இருந்தார். இப்போதும் காமெடிதான் செய்து கொண்டு இருக்கிறார். ஆனால் சூரி தான் எனது படத்தின் கதாநாயகன் என்ற முடிவை முதலில் எடுத்தது, இயக்குநர் வெற்றிமாறன். விடுதலை பாகம் 1 படத்தில் சூரி கதாநாயகன் என்ற முதற்கட்ட தகவல் பலருக்கும் ஷாக் கொடுத்தது. வெற்றிமாறன், காமெடி படம் எடுக்கப்போகிறாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. ஆனால் படத்தின் போஸ்டரைப் பார்த்ததும், சூரியின் மீது இருந்த காமெடியன் பிம்பம் மொத்தமாக உடைந்துவிட்டது. தனது முதல் படத்திலேயே சூரி, கிட்டத்தட்ட 60 கோடிகள் வரை வசூல் குவித்தார்.
அடித்து ஆடும் சூரி: அதன் பின்னர், கொட்டுக் காளி, விடுதலை பாகம் 2, கருடன், தற்போது மாமன், ரிலீஸ் ஆக உள்ள ஏழு கடல் ஏழு மலை என தனது ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் சூரி. மேலும் தனது கதாபாத்திரத்தை தேர்வு என்பதை தொடர்ந்து கிராமப்புற பின்னணியை மையமாக கொண்டு நடித்து வருகிறார். இது சூரியின் பலம் தெரிந்து சூரி களமிறங்கியுள்ளார் என்பதை நன்றாக உணர்த்துகிறது. இது மட்டும் இல்லாமல், தான் கதாநாயகன் என்ற தளத்திற்கு நகர்ந்த பின்னர் காமெடி காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தனது நடிப்பை வெளிக்காட்ட, கதையை மெருக்கேற்ற என்ன தேவையோ அதைச் செய்ய முற்படுகிறார். இப்படியான விஷயங்களைத்தான் சந்தானம் கோட்டை விட்டுள்ளார். அதனால்தான் கதாநாயகனாகவே நடித்தாலும் சந்தானத்தை காமெடியனாக ரசிகர்கள் பார்க்கிறார்கள். கதையில், கதாபாத்திரத் தேர்வில், நடிப்பில் என தொடர்ந்து வித்தியாசம் காட்டி வருவதால் கதாநாயகனாக தன்னை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறார் சூரி.


Click it and Unblock the Notifications











