எவ்வளவு நெருக்கடி தெரியுமா?.. குழந்தைகளுக்கு ஃபீஸ் கட்டணும்..சுத்தமா முடியல..பிளாக் பாண்டி ஓபன் டாக்
சென்னை: பிளாக் பாண்டி தமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாக நடித்துவருபவர். சினிமா மட்டுமின்றி சீரியல்களிலும் அவர் நடித்திருக்கிறார். முக்கியமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து வெகு பிரபலமடைந்திருக்கிறார். சினிமாவை பொறுத்தவரை அவர் ஏகப்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் அங்காடித் தெரு படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனைத் தொடர்ந்து அவர் நடித்த சாட்டை திரைப்படத்திலும் சிறப்பான பெயரை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. இப்படி நல்ல நடிகர் என்ற அடையாளம் இருந்தாலும் அவருக்கு வாய்ப்புகள் அவ்வளவாக வருவதில்லை. இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர் பிளாக் பாண்டி. அவரது உண்மையான பெயர் லிங்கேஸ்வரன் ஆகும். சிறு வயதிலிருந்தே அவருக்கு நடிப்பு மீது தனி ஆர்வம் இருந்தது. இதன் காரணமாக அப்போதிருந்தே சினிமாவில் நடிக்க ட்ரை செய்தார். அதன்படி குழந்தை நட்சத்திரமாக அவர் கோலிவுட்டில் அறிமுகமானார். அந்தவகையில் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, நாகேஸ்வரி, வெல்டன், ஆட்டோகிராஃப் என வரிசையாக அவர் நடிக்க ஆரம்பித்தார். இதன் காரணமாக அவர் கண்டிப்பாக திரைத்துறையில் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றபடிதான் அவருக்கு வாய்ப்புகளும் வந்துகொண்டிருந்தன.
சீரியலில் பிளாக் பாண்டி; இது ஒருபக்கம் இருக்க வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி கதை நேரம், மெட்டி ஒலி,கோலங்கள் என நடித்துக்கொண்டிருந்த அவருக்கு பெரிய பிரேக் கிடைத்தது என்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில்தான். இதில் அவர் பாண்டி என்ற கேரக்டரிலேயே நடித்திருந்தார். அப்போதைய இளைஞர்களிடம் அந்த சீரியல் மெகா வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சில சீரியல்களில் நடித்த அவருக்கு சினிமா ஆசை விட்டுவிடவில்லை.

அங்காடித் தெரு பாண்டி: ஆனால் அந்த ஆசை அவருக்கு முழுவதுமாக நிறைவேறவில்லை. அவருக்கு வாய்ப்புகள் வந்தாலும் கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் சின்ன சின்ன ரோல்களுக்கானதாகவே இருந்தன. அப்படி அவர் லீ, சிங்கார சென்னை, தீக்குச்சி, சிங்காரச என நடித்தார். இப்படிப்பட்ட சூழலில்தான் வசந்தபாலன் இயக்கிய அங்காடித் தெரு படத்தில் ஹீரோவின் நண்பராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவ்வளவு அட்டகாசமாக நடித்திருந்தார் பிளாக் பாண்டி. காமெடி சீன், எமோஷனல் சீன் என அத்தனையிலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்தார். அவருக்கு பெரிய வரவேற்பும் கிடைத்தது. எனவே அந்தப் படத்திலிருந்து தனது கரியரின் நிலைமை மாறும் என்று எதிர்பார்த்திருந்தார்.
சாட்டையில் பாண்டி: அதற்கு பிறகு ஓரளவுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் சொல்லிக்கொள்ளும்படியான ரோல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அப்படியே அவருக்கு கொஞ்சம் முக்கியத்துவம் இருக்கும் ரோல்கள் கிடைத்தாலும் அந்தப் படங்கள் பெரிதாக ஹிட்டாகவில்லை. அப்படிப்பட்ட நிலையில் சாட்டை படத்தில் நடித்தார். அந்தப் படத்திலும் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளினார். மிகச்சிறந்த நடிப்பை அவர் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே வந்திருந்தாலும் கோலிவுட் படைப்பாளிகள் ஏனோ அவரை பெரிதாக கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள். இந்நிலையில் பிளாக் பாண்டி இப்போது இஎம்ஐ என்கிற படத்தில் நடித்திருக்கிறார். படம் விரைவில் ரிலீஸாகவிருக்கும் நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் தன்னுடைய வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
பிளாக் பாண்டி பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "சினிமாவை பொறுத்தவரை ஒரு காமெடியனாக நிலை பெறுவது ரொம்பவும் கஷ்டமான ஒன்று. வெளியில் இருந்து பார்ப்பவர்கள் என்னை வேறு மாதிரி பார்ப்பார்கள். உதாரணத்துக்கு நான் மதுரைக்கு சென்றுகொண்டிருக்கிறேன் என்று வையுங்கள். நான் சென்று கொண்டிருக்கிறேன் என்றுதான் அர்த்தாம். ஆனல் அவனுக்கான இடத்தை அடையவில்லை என்று சொல்வார்கள். அப்படி எப்படி சொல்ல முடியும். சினிமாவிலும் அப்படித்தான். 26 வருடங்களாக நான் சினிமாவில் நடிக்கிறேன். இன்றும் களத்தில்தானே நான் இருக்கிறேன். பிறகு என்ன?

விஜய், அஜித் போன்று சம்பாத்தியமா?: நான் அஜித், விஜய் போல் சம்பாதித்துக்கொண்டிருக்கிறேன் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் உண்மை நிலவரம் அப்படி இல்லை. எனது சூழ்நிலையே வேறு. என்னுடைய குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட வேண்டும். வீட்டு வாடகை கொடுக்க வேண்டும். இவ்வளவு நெருக்கடி எனக்கு இருக்கிறது. இவையெல்லாம் எனது மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு பார்ட்டியில் சூரியும், பாண்டியும் கவுண்டமணி செந்தில் ஜோடி போல். அவர்களது காம்பினேஷன் ரொம்பவே நன்றாக இருக்கிறது சொன்னார். அதனால் அவரது அரண்மனை 3யில் எனக்கு வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வாய்ப்பு எதுவும் கொடுக்கவில்லை.
கதை மாறிவிட்டது என்றார் வெற்றிமாறன்: வெற்றிமாறன் சார் உதவி இயக்குநராக இருந்தபோதே அவரை எனக்கு தெரியும். அவர் தயாரித்த இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தில் நானும் சூரியும்தான் கமிட்டாகியிருந்தோம். அதனால் சந்தோஷமாக இருந்தேன். ஃபோட்டோஷூட்டெல்லாம் எடுத்தார்கள். மேலும் என்னுடைய பாஸ்போர்ட் கிட்டத்தட்ட ஆறு மாதங்கலாக வெற்றிமாறன் ஆஃபிஸில்தான் இருந்தது. ஆனால் சூரி மட்டுமே படத்தில் இருப்பதாக தெரியவந்தது. வெற்றிமாறனிடம் ஃபோன் செய்து கேட்டால் கதை மாறிவிட்டது என்று சொல்லிவிட்டார். வாய்ப்ப்கள் எல்லாம் இப்படி கைகள் மீறி போகும்போது நான் வருத்தப்பட்டதில்லை. ஏனெனில் பலமுறை அப்படித்தான் நடந்திருக்கிறது.

சம்பளமே கொடுக்கவில்லை: வெங்கட் பிரபுவின் கோட் படத்தில் சண்டை போட்டு நடிக்க வாய்ப்பு வாங்கினேன். ஆனால் படத்தில் நான் நடித்த காட்சிகளே இல்லை. அதேபோல் பாபா படத்தில் சிறு வயது ரஜினிகாந்த்தாக நடித்தேன். ஆனால் எடிட்டிங்கில் அந்தக் காட்சிகள் எல்லாம் தூக்கப்பட்டுவிட்டன. சாட்டை படத்தில் நடித்தேன். அதற்கு அந்தப் படத்தை தயாரித்த பிரபு சாலமன் எனக்கு சம்பளமே கொடுக்கவில்லை. அவரை நான் திட்டத்தான் செய்வேன். ஒன்றுமே இல்லாதவனுக்கு நீங்கள் அப்படி செய்தீர்கள் என்றால்கூட பரவாயில்லை நான் ஒரு இடத்துக்கு வந்துவிட்டேன். அப்படிப்பட்ட எனக்கு எப்படி சம்பளம் தராமல் இருக்கலாம்" என்றார்.
அஞ்சலி, சிவகார்த்திகேயன்: முன்னதாக பிளாக் பாண்டி அளித்திருந்த இன்னொரு பேட்டியில், அஞ்சலியை எனக்கு நடன பள்ளியிலிருந்தே தெரியும். ஆனால் அங்காடித் தெரு வெற்றிக்கு பிறகு என்னிடம் அவர் பேசக்கூடவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல் சிவகார்த்திகேயன் பற்றி ஒரு பேட்டியில் பேசிய பாண்டி, 'சிவகார்த்திகேயனை ஒருமுறை சந்திக்க நான் நினைத்தேன். அது அவரது மேனேஜர் மூலம் அவரின் காதுகளுக்கு சென்றது. ஆனால் நான் பணம்தான் கேட்கிறேன் என்று நினைத்துக்கொண்டு பணத்தை கொடுத்துவிட்டார். அதனை என் அம்மா வாங்க மறுத்து எனது மகனுக்கு பணம் வேண்டாம் வாய்ப்புதான் வேண்டும்' என சொன்னதாக பாண்டி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











