செத்து செத்து விளையாடலாம்னு சொல்வாரே.. காமெடி நடிகர் முத்துக்காளை மகன் +2வில் எவ்வளவு மார்க் தெரியுமா?
சென்னை: "செத்து செத்து விளையாடுவோமான்னு" என் புருஷன் குழந்தை மாதிரி படத்தில் கேட்டு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் தான் காமெடி நடிகர் முத்துக்காளை. ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா, நக்மா, வடிவேலு நடித்த காதலன் படத்தில் இடம்பெற்ற "ஊர்வசி ஊர்வசி" பாடலில் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக அறிமுகமாகி அப்படியே வடிவேலு டீமில் இணைந்து பல படங்களில் நடித்து கலக்கியவர் தான் முத்துக்காளை.
இன்று வெளியான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அவருடைய மகன் வாசன் முரளி நல்ல மதிப்பெண்களை பெற்றுத் தேர்வாகியிருப்பது முத்துக்காளையை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

+2 தேர்வில் வெற்றிப் பெற்ற மகனுக்கு அவனுக்கு பிடித்த பரிசையும் வாங்கிக் கொடுத்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
+2 தேர்வு முடிவுகள்: தமிழ்நாட்டில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் காலையிலேயே வெளியாகின. வழக்கம் போல இந்த முறையும் மாணவிகளே அதிக சதவீதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள 7518 பள்ளிகளில் 8 லட்சத்துக்கும் அதிக்மான மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 95.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற முடியாத 5 சதவீத மாணவர்களுக்கு சீக்கிரமே மறு தேர்வு நடத்தப்படும் என்பதால் யாரும் கவலைப்படாமல் மறு தேர்வில் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையுடன் படியுங்கள் என பலரும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
காமெடி நடிகர் முத்துக்காளை: காதலன், பொன்மனம், என் உயிர் நீதானே, வாலி, சுயம்வரம், மின்சார கண்ணா என பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த முத்துக்காளை வடிவேலுவுடன் இணைந்து நடிக்கத் தொடங்கியதும் அதிகப்படியான மக்களால் ரசிக்கப்பட்டார். அதுவும் என் புருஷன் குழந்தை மாதிரி படத்தில் நெற்றியில் ஒரு எக்ஸ் கோடு போட்டுக் கொண்டு செத்து செத்து விளையாடுவோம் வான்னு வடிவேலை வம்பிழுக்க ஒட்டுமொத்த அரங்கமும் முத்துக்காளையின் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்தது. தவசி, சுள்ளான், இம்சை அரசன், மொழி, சிவாஜி, சந்திரமுகி 2, மத கஜ ராஜா உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
முத்தான மதிப்பெண் பெற்ற முத்துக்காளையின் மகன்: இன்று வெளியான பன்னிரண்டாம் பொதுத் தேர்வு முடிவுகளில் முத்துக்காளையின் மகன் வாசன் முரளி 600க்கு 438 மார்க் எடுத்து பாஸ் ஆகியுள்ளார். தனது மகன் +2 தேர்வில் முத்தான மதிப்பெண் பெற்று பாஸ் ஆகியிருப்பதை சந்தோஷமாக கொண்டாடியுள்ளார். மகனுக்கு ரொம்பவே பிடித்த பால்கோவாவை வாங்கி ஊட்டும் புகைப்படத்தையும் அவர் ஷேர் செய்துள்ளார்.
3 டிகிரி முடித்தவர்: ஆரம்பத்தில் குடும்ப சூழல் காரணமாக முத்துக்காளையால் பெரிதாக படிக்க முடியவில்லை. கஷ்டப்பட்டு பள்ளிப்படிப்பை மட்டும் முடித்தார். கராத்தேவில் ஆர்வம் இருந்த நிலையில், பிளாக் பெல்ட் எல்லாம் வென்ற அவர் சினிமாவில் ஸ்டன்ட் கலைஞராக சேர வேண்டும் என விரும்பி உள்ளே வந்த நிலையில், காமெடியனாக மாறிவிட்டார். சினிமாவில் நடித்து ஓரளவுக்கு பணம் ஈட்டிய நிலையில், குடிப்பழக்கத்தை எல்லாம் விட்டு விட்டு கஷ்டப்பட்டு திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் சேர்ந்து ஹிஸ்டரி, தமிழ் மற்றும் பி.லிட் என இதுவரை அடுத்தடுத்து 3 டிகிரிகளை இந்த வயதிலும் படித்து பெற்றுள்ளார். அவருடைய மகனும் நல்லா படிக்க வேண்டும் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











