நான் என்ன குடிகாரனா? இப்போ படிச்சு பட்டம் வாங்கிட்டேன்..கம்பீரமாய் பேசிய முத்துக்காளை!
சென்னை: இன்னமும் நான் Wine shop வாசல்ல படுத்து கிடக்குற மாதிரி செய்தி வருகிறது. அதை மாற்றத்தான் இத்தனை பட்டம் வாங்கினேன் என்று முத்துக்காளை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நகைச்சுவை நடிகர் முத்துக்காளை, கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்ற இவர், சினிமாவில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார். இதையடுத்து, 1997ம் ஆண்டு பொன்மனம் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு என் உயிர் நீதானே, நிலவே முகம் காட்டு போன்ற படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருந்த போது, நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் நட்பு ஏற்பட்டதால், அவருடன் இணைந்து ஒரு சில படங்களில் நடித்தார்.

அவருடன் இணைந்து செத்து செத்து விளையாடலாம் காமெடி மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்ததைத் தொடர்ந்து வடிவேலுவுடன் சேர்ந்து எம் குமரன் சன் ஆப் மஹாலட்சுமி, சீனா தானா 001, விந்தை, கபாலி தோட்டம் என பல திரைப்படங்களில் அவருடன் சேர்ந்து நடித்தார். ஆனால், வடிவேலுவுக்கு மார்க்கெட் குறைந்ததை தொடர்ந்து முத்துக்காளைக்கும் படவாய்ப்பு இல்லாமல் போனது. பெரிதாக படவாய்ப்பு இல்லாததால், இவரை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை.
முத்துக்காளை 3 பட்டம்: இதையடுத்து, முத்துக்காளை படித்து மூன்று பட்டம் வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் 2017ம் ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. வரலாறு பாடத்தில் இரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். அதன் பிறகு 2019ம் ஆண்டு எம்.ஏ. தமிழ் படித்து அதிலும் முதல் வகுப்பில் தேச்சி பெற்றுள்ளார். தற்போது, B.Lit தமிழில் தேர்வெழுதி அதிலும் பர்ஸ்ட் கிளாசில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் மூலம் சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.

முத்துக்காளை பேட்டி: இந்நிலையில் பேட்டி அளித்துள்ள முத்துக்காளை, எனக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் சங்கம்பட்டி. என்னுடைய சிறு வயதில் படிப்பில் ஆர்வம் இருந்தாலும் கூட விளையாட்டுத் தனத்தில் எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் என் குடும்பம் பெரிய குடும்பம் என்பதால், என்னால் ஸ்கூல் பீஸ் கட்டி படிக்க முடியவில்லை. என்னுடைய கனவு ஃபைட் மாஸ்டர்தான். 18 வயசிலேயே கராத்தேல பிளாக் பெல்ட் வாங்கிட்டேன். 20 வயதில் கராத்தே வகுப்பு எடுத்தேன். கிட்டத்தட்ட 50 பேருக்கும் மேல் என்னிடம் கராத்தே கத்துக்கிட்டாங்க.
முத்துக்காளை ஒரு குடிகாரன்: ஆனால், எனக்கு கல்வி மீது ஒரு ஆர்வம் இருந்து கொண்டே இருந்ததால், நான் அதை இப்போது செய்து இருக்கிறேன். கற்றவர்களுக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பதை மனதில் வைத்துக்கொண்டு படிக்க வேண்டும். நான் மதுவிற்கு அடிமையாக இருந்த போது என்னை வேறு ஒரு பாதைக்கு மாற்றியது கல்விதான். நான் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டு ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால், முத்துக்காளை ஒரு குடிகாரன், Wine shop வாசல்ல படுத்து கிடக்குற மாதிரி செய்தி வருகிறது. இந்த செய்தியை மாற்ற வேண்டும் என்று ஆசை பட்டேன் தற்போது, குடிகாரன் என்ற பெயரை மாற்றி இருக்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











