சீமானும், குழந்தைகளும் இல்லைனா வடிவேலு கதையை அப்பவே முடிச்சிருப்பேன்.. காமெடி நடிகர் பரபரப்பு பேட்டி
சென்னை: சீமானும், மூன்று பெண் குழந்தைகளும் இல்லையென்றால் வடிவேலுவின் கதையை எப்போதோ முடித்திருப்பேன் என காமெடி நடிகர் சிஸர் மனோகர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் வடிவேலு. முதல் படத்தில் சில சீன்களில் மட்டுமே தோன்றியிருந்தாலும் தான் தோன்றிய சீன்களில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் கைதட்டல் வாங்கியவர். அதன் பிறகு அசுர வேகத்தில் வளர்ந்தார். ஒருகட்டத்தில் வடிவேலு இன்றி கோடம்பாக்கம் அசையாது என்ற நிலைதான் இருந்தது. பல படஙக்ளில் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார். அப்படி அவர் நடித்த நகைச்சுவைகள் அனைத்தும் மெகா ஹிட்டாகவும் செய்தன.

பிரச்னைகளை சந்தித்த வடிவேலு
இப்படி உச்சத்தில் சென்றுகொண்டிருந்த வடிவேலு அரசியல் மேடை ஏறினார். அந்த மேடையில் ஜெயலலிதாவையும், விஜயகாந்த்தையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தத் தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து வடிவேலுவுக்கும் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. ஜெயலலிதாவை விமர்சனம் செய்த வடிவேலுவை அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது நடிப்பதற்கு புக் செய்தால் பிரச்னை வந்துவிடுமோ என தயாரிப்பாளர்கள் பயந்ததாக இன்றுவரை பேசப்படுவதுண்டு.

திரைத்துறையிலிருந்து காணாமல் போன வடிவேலு
இப்படி பட வாய்ப்புகள் குறைந்துகொண்டே செல்ல ஒருகட்டத்தில் திரையிலிருந்தே காணாமல் போனார் வடிவேலு. மேலும், இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படம் தொடர்பாக அவருக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் பிரச்னையும் ஏற்பட்டது. தொடர்ந்து பல வருடங்கள் நடிக்காமல் இருந்த வடிவேலு; சமீபத்தில்தான் அனைத்து பஞ்சாயத்துகளையும் முடித்துவிட்டு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்தார்.

சொதப்பல் ஆன வடிவேலுவின் காமெடி
வடிவேலு ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார் என்ற மிகப்பெரிய ஆவலோடு ரசிகர்கள் படத்தை பார்த்தனர். ஆனால் அவரது காமெடி ரசிகர்களுக்கு சிரிப்பை வரவைக்கவில்லை. மாறாக சலிப்பையே ஏற்படுத்தியது. வடிவேலு காலத்திற்கேற்றவாறு மாறவில்லை என ரசிகர்களும் வெளிப்படையாக விமர்சனத்தை முன்வைத்தனர். இதனால் ரசிகர்கள் ரீ எண்ட்ரி கொடுத்தாலும் வெறித்தனமான கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவர் தற்போது மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

வடிவேலு மீது குவியும் விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும்
சூழல் இப்படி இருக்க சமீபத்தில் மயில்சாமி உயிரிழந்தார். ஆனால் அவரது இறுதி சடங்குக்கு வடிவேலு வரவில்லை. இது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதேபோல் ஆரம்பகாலத்தில் தன்னோடு நடித்தவர்களையும், தன்னை வளர்த்துவிட்டவர்களையும் அவர் மதிப்பதே இல்லை. அவர்களுக்கான வாய்ப்புகளை பல படங்களில் மட்டப்படுத்தியிருக்கிறார் எனவும் சமீபத்தில் குற்றச்சாட்டுக்கள் அதிகம் வந்துகொண்டிருக்கின்றன.

எப்போவோ வடிவேலு கதையை முடிச்சிருப்பேன் - சிஸர் மனோகர்
இந்நிலையில் சிஸர் மனோகரும் வடிவேலு பற்றிய தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார். சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், "வடிவேலு என்னிடம்தான் ஒரு மாதம் தயாரிப்பு நிர்வாகியாக வேலை பார்த்தார். அவர் வளர்ந்த பிறகு பகவதி படத்தில் நடித்தார். அப்போது அதில் வரும் இன்னொரு வடிவேலுவாக என்னைதான் கமிட் செய்திருந்தார்கள். ஆனால் இவரால் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நான் அனுப்பப்பட்டேன்.
இயக்குநர் சீமான் தான் அப்போது எனக்கும் அவருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்தார். நான் மிகப்பெரிய கோபக்காரன். எனக்கு மட்டும் மூன்று பெண் பிள்ளைகள் இல்லாமல் இருந்திருந்தால் வடிவேலுவின் கதையை அப்போதே முடித்துவிட்டிருப்பேன்" என கூறியிருக்கிறார். அவரது இந்தப் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் வடிவேலு குறித்து சமீபகாலமாக பலர் பேசுவதை பார்க்கும்போது அவர் நடிகராக மட்டும்தான் சிறந்தவர் மனிதராக இல்லை என பலர் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











