மாப்பிள்ளையும் அவர் தான்.. போட்டுருக்க டிரெஸ்ஸும் அவருடையது தான்.. பீமரத சாந்தி பூஜை செய்த செந்தில்!
சென்னை: பிரபல காமெடி நடிகர் செந்தில் சமீபத்தில் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், தற்போது தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் உடன் பீமரத சாந்தி பூஜை விழாவை செய்துள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
நகைச்சுவை நடிகர் கவுண்டமணி உடன் இணைந்து ஏகப்பட்ட திரைப்படங்களில் காமெடியில் கலக்கி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் பல காலம் சிரிக்க வைத்தவர் செந்தில்.
72 வயதிலும் சில படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வரும் செந்தில் பீமரத சாந்தி பூஜையை நடத்தி உள்ளார்.

காமெடி நடிகர் செந்தில்
1979ம் ஆண்டு வெளியான ஒரு கோயில் இரு தீபங்கள் மற்றும் பசி உள்ளிட்ட படங்களின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமானவர் செந்தில். காமெடி நடிகர் கவுண்டமணி உடன் இணைந்த செந்தில் கரகாட்டக்காரன், சின்னக்கவுண்டர், ஜென்டில்மேன், எஜமான், அவள் வருவாளா உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் இணைந்து பணியாற்றி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார்.

72வது பிறந்தநாள்
1951ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்த செந்தில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய காமெடி ஜாம்பவானாக வலம் வருகிறார். கடந்த மார்ச் 23ம் தேதி தனது 72வது பிறந்தநாளை நடிகர் செந்தில் கொண்டாடிய நிலையில், தற்போது குடும்பத்துடன் பீமரத சாந்தி பூஜையை கோலாகலமாக செய்துள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

பீமரத சாந்தி பூஜை
நடிகர் செந்தில் தனது மனைவியுடன் திருக்கடையூர் கோயிலில் பீமரத சாந்தி பூஜை செய்து கொண்ட புகைப்படங்கள் தற்போது டிரெண்டாகி வருகின்றன. 1984ம் ஆண்டு கலைச்செல்வியை என்பவரை திருமணம் செய்து கொண்ட செந்திலுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஒரு மகன் தற்போது சினிமாவில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆயுள் விருத்திக்காக
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள திருக்கடையூரில் உள்ள அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆயுள் விருத்தி வேண்டி 60 வயதில் சஷ்டியப்தப் பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி பூஜை 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகம் மற்றும் 100 வயதில் பூரணாபிஷேகம் உள்ளிட்ட சடங்குகளை கோயிலில் செய்து கடவுளிடம் தங்கள் ஆயுள் விருத்திக்காக வழிபட்டு வருகின்றனர்.

குடும்பத்தினர் மகிழ்ச்சி
செந்தில் மற்றும் கலைசெல்வி தம்பதியினரை மீண்டும் மணக்கோலத்தில் அமர்த்தி மாப்பிள்ளை பொண்ணாக அலங்கரித்து கோயிலில் கோலாகலமாக பீமரத சாந்தி பூஜையை அவரது மகன்கள் மற்றும் பேரக் குழந்தைகள் சூழ செய்து ஒட்டுமொத்த குடும்பமே மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சிகள் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











