ஹீரோவாக நடிக்கும் செந்தில்.. புதிய படத்தின் டப்பிங்கை முடித்து அசத்தல்.. வைரலாகும் புகைப்படங்கள்!
சென்னை: தமிழ் சினிமாவின் லெஜண்டரி காமெடி நடிகர் செந்தில் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளன.
ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் நடிகர் செந்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது டப்பிங் பணிகளும் முடிந்துள்ளன.

லெஜண்டரி காமெடி நடிகர்
தமிழ் சினிமாவின் லெஜண்டரி காமெடி நடிகர்கள் என்றால் உடனே பலரது நினைவுக்கும் வருவது கவுண்டமணி மற்றும் செந்தில் தான். கவுண்டமணி தனியாக பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள நிலையில், நடிகர் செந்திலும் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.

தானா சேர்ந்த கூட்டம்
நடிகர் செந்தில் 500க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் அனைத்து உச்ச நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில், சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தார். சன் டிவியில் கடந்த 2019ம் ஆண்டு ஆரம்பமான ராசாத்தி சீரியலிலும் நடித்திருந்தார்.
Recommended Video

ஹீரோவாக செந்தில்
என்.எஸ்.கே, நாகேஷ், சந்திரபாபு, கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், யோகி பாபு, சூரி, சதீஷ் என காமெடி நடிகர்களும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹீரோக்களாக நடித்து வருகின்றனர். சிலருக்கு அது நல்லாவே செட் ஆகும். சிலருக்கு அந்த அளவுக்கு செட் ஆகாது. இந்த வரிசையில் நடிகர் செந்திலும் ஹீரோ அவதாரம் எடுக்க உள்ளார்.

இயக்குநர் யார்
நடிகர் வித்தார்த், டப்பிங் கலைஞர் ரவீனா ரவி நடிப்பில் வெளியான ஒரு கிடாயின் கருணை மனு என்கிற வித்தியாசமான படத்தை இயக்கி பலரது பாராட்டுக்களை அள்ளிய இயக்குநர் சுரேஷ் சங்கையா தான் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

சத்ய சோதனை
ஒரு கிடாயின் கருணை மனு படத்தைத் தொடர்ந்து நடிகர் பிரேம்ஜி நடிப்பில் சத்ய சோதனை எனும் படத்தையும் இவர் இயக்கி உள்ளார். சமீபத்தில் அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். விரைவில் அந்த படம் வெளியாக காத்திருக்கிறது.

டப்பிங்கை முடித்த செந்தில்
இந்நிலையில், இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகி வரும் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் செந்தில் முடித்துக் கொடுத்துள்ளார். டப்பிங்கை முடித்த செந்தில் ஸ்டூடியோவில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ஆயுள் கைதி
ஆயுள் தண்டனை முடிந்து தனது கிராமத்துக்கு வரும் ஒரு கைதியின் கதை தான் இந்த படத்தின் கரு என தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் நய்யாண்டிகளுடன் சமூக நய்யாண்டிகளையும் சேர்த்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்த படத்தை உருவாக்கி வருவதாக தெரிகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
70 வயதாகும் நடிகர் செந்தில் இந்த வயதில் ஹீரோவாக எப்படி திரையில் கலக்கப் போகிறார் என்பதை காணவே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். நடிகர் கவுண்டமணியும் ஹீரோவாக 49 ஓ படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து ஹீரோவாக எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் ஓடாத நிலையில், மீண்டும் ஓய்வில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











