Rajini - ஷூட்டிங் ஸ்பாட்டில் சூப்பர் ஸ்டார் இப்படித்தான் இருப்பார்.. ரஜினி பற்றி செந்தில் பகிர்ந்த சுவாரஸ்யம்
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த் எப்படி இருப்பார் என்பது குறித்து நகைச்சுவை நடிகர் செந்தில் தெரிவித்திருக்கிறார்.
சூப்பர் ஸ்டார், தலைவா என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். 169 படங்களில் நடித்திருக்கும் அவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கிறார். இதற்கிடையே தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் அவர் நடித்த லால் சலாம் படமும் பொங்கலுக்கு ரிலீஸாகிறது.

பிறந்தநாள்: ரஜினி நேற்று தனது 74ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி வேட்டையன் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. பலரும் அவருக்கும் படத்துக்கும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் 74 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக நடித்துவருகிறாரே என ஆச்சரியமும் பட்டனர். இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
செந்தில் பேட்டி: தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், "ரஜினிகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து. அவருடன் நிறைய படங்கள் சேர்ந்து நடித்திருக்கிறேன். அவர் ஒரு நல்ல டைமிங் ஆர்ட்டிஸ்ட். அந்தக் காலத்தில் நவரச நாயகன் என்று முத்துராமனை சொல்வார்கள். அதேபோல் ரஜினியிடமும் அது இருக்கிறது. அவரால் வில்லன், ஹீரோ, அப்பா, தாத்தா, காமெடி என எந்த ரோல் ஆனாலும் சிறப்பாக செய்ய முடியும்.
டெவலப் செய்வார்: காமெடியை பொறுத்தவரை ரஜினிகாந்த் நன்றாக அதனை டெவலப் செய்வார். படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் முழுதாக தன்னை அர்ப்பணிப்பார். இரவு முழுக்க தூங்கவே மாட்டார். இயக்குநருடன் சேர்ந்து பல காட்சிகள் குறித்து டிஸ்கஸ் செய்து அதை ஃபிக்ஸ் செய்வார். ஆனால் பகலில் அதனை காட்டிக்கொள்ளவே மாட்டார்.
அவர் செய்ததுதான்: படையப்பா படத்தில் மாப்பிள்ளை அவர்தான் காமெடியில் முதலில் 2, 3 வரிகள்தான் இருந்தது. ஆனால் அதை அவ்வளவு பெரிதாக டெவலப் செய்தது ரஜினிகாந்த்தான். அவரது டைமிங் மேல் தட்டு மக்களுக்கும் சென்று சேரும். கீழ் தட்டு மக்களுக்கும் சென்று சேரும். அதனால்தான் அவரது புகழ் உலகம் முழுவதும் சென்று சேர்ந்திருக்கிறது.
மாலை போட்டார்: வீரா படத்தில் வேலை செய்யும்போது அவர் எனக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பாராட்டினார். அவர் ஒரு நல்ல மனிதர். நாம் செய்யும் விஷயம் நன்றாக இருந்தது என்றால் நன்றாக இருக்கு என்று சொல்வார். நன்றாக இல்லாவிட்டால் எதுவும் சொல்லாமல் சென்றுவிடுவார். அதுதான் அவரது குணம்" என்றார்.


Click it and Unblock the Notifications











