மயில்சாமி அதை செய்து இருக்கணும்.. இறந்துவிட்டாலும் அவர் மீது குற்றம் சாட்டுவேன்.. சிங்கமுத்து ஆதங்கம்!
சென்னை : நடிகர் மயில்சாமி அதை செய்ய மறந்துவிட்டார், அதை அவர் செய்து இருக்க வேண்டும், அவர் இறந்துவிட்டாலும் அவர் மீது நான் குற்றம் சாட்டுவேன் என்று நடிகர் சிங்கமுத்து ஆதங்கத்துடன் பேட்டி அளித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி பிப்ரவரி 19ந் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் காலமானார். மஹா சிவராத்திரி தினமான அன்று இரவு முழுவதும் பூஜையில் கலந்து கொண்டு விட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மயில்சாமி
இதையடுத்து, மயில்சாமியின் உடல், சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு. பிப்ரவரி 20ந் தேதி வடபழனி ஏவிஎம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதிச்சடங்கில் ஏராளமான நடிகர்,நடிகைகள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

நடிகர் சிங்கமுத்து
இந்நிலையில், மயில்சாமியின் நெருங்கிய நண்பரான, நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், மயில்சாமி இறந்த செய்தி கேட்டு மிகவும் பதறிப்போய்விட்டேன். நான் குலசாமி வழிபாடுக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்ததால், என்னால் வர முடியாமல் போய்விட்டது.

தீவிர சிவபக்தர்
சிவராத்தி தினத்தில் உயிரிழப்பது என்பது யாருக்கும் கிடைத்துவிடாத ஒன்று, சினிமாவில் இருந்தாலும் சிவன் மீது தீரா பக்தி வைத்திருந்தார். நானும் மயில்சாமியும் ஒரு சில படங்களில் தான் நடித்திருக்கிறோம். ஆனால், சிவராத்திரி அன்று திருவண்ணாமலை, கேளம்பாக்கம் கோவில் போன்றவற்றில் தொடர்ந்து பல மணி நேரம் பாடுவேன் அப்படித்தான் எங்கள் நட்பு நெருக்கமானது

ஈகை குணம் கொண்டவர்
எம்ஜிஆரின் தீவிர பக்தரான மயில்சாமி, அவரைப் போலவே மற்றவர்களுக்கு உணவு அளித்து அழகு பார்ப்பார், அவரிடம் பெரிதாக பணம் இல்லை , வசதி இல்லை என்ற போதிலும், தன்னால் முடிந்ததை மற்றவர்களுக்கு கொடுக்கும் ஈகை குணம் அவரிடம் உண்டு. பணம் இல்லை என்றாலும், நகையை அடமானம் வைத்து உதவி செய்யும் குணம் கொண்டவர் மயில்சாமி.

குற்றம்சாட்டுவேன்
எல்லா நன்மைகளை செய்த மயில்சாமி, தனது உடலை பேணிக்காக்கவில்லை என்று தான், நான் அவர் மீது குற்றம் சாட்டுவேன். இப்போது அவர் இறந்திருந்தாலும் பரவாயில்லை. தர்மம் செய்யவேண்டிய நீ, ரொம்ப நாள் அதை செய்ய வேண்டிய நீ, ஏன் உடலை கவனிக்காமல் விட்டாய் என குற்றம் சாட்டுவேன் என்று நடிகர் சிங்கமுத்து ஆதங்கத்துடன் பேசினார்.


Click it and Unblock the Notifications











