டிவியில் என்ட்ரி கொடுக்கும் வைகை புயல்.. சம்பள விஷயத்தில் கறார் காட்டிய வடிவேலு!
சென்னை: ரசிகர்களால் வைகைப்புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் பார்முக்கு வந்துள்ளார். வடிவேலு நடித்த மாமன்னன் படம் மெகா ஹிட்டடித்த போதும் இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படங்கள் இல்லாததால், சின்னத்திரையில் என்ட்ரியாக இருக்கும் வடிவேலு அதிக சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் மிகச்சிறந்த டாப் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் வடிவேலு. ராஜ்கிரண் உதவியால் சினிமாவில் நடிக்க வந்த இவர், கவுண்டமணி, செந்தில் கொடி கட்டிபறந்த காலத்திலேயே அவர்களுடன் ஒரு சில திரைப்படங்களில் சேர்ந்து நடித்தார். தன்னுடைய தனத்துவமான உடல்மொழியாலும், ஏற்ற இறக்கமான பேச்சாலும் மக்களை சிரிக்க வைத்த அழகு பார்த்தார் வடிவேலு. கவுண்டமணியும் செந்திலும் சினிமாவிலிருந்து ஒதுங்கிய நேரத்தில், வடிவேலு அந்த இடத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு டாப்க்கு வந்தார்.

வடிவேலுவின் அசுர வளர்ச்சி: 2000ம் ஆண்டில் வடிவேலுவின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தது என்று சொல்லும் அளவிற்கு ரஜினிகாந்த், விஜய், அஜித், சிம்பு, பார்த்திபன், சத்யராஜ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார். ஒரு கட்டத்தில் இவர் இல்லாத படமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்துப்படங்களிலும் நடித்து அப்ளாஸை அள்ளினார்.
10 வருஷம் படவாய்ப்பு இல்ல: இப்படி பீக்கில் இருந்த வடிவேலு 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளாகி திரையுலகில் ஓரம் கட்டப்பட்டார். ஜெயலலிதாவுக்குப் பயந்து திரையுலகில் யாரும் வடிவேலுவிற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமும் அவர் பட வாய்ப்புகள் இல்லாமலேயே இருந்து வந்த வடிவேலு, நாய் சேகர் ரிட்டன்ஸ் நிகழ்ச்சி மூலம் என்ட்ரி கொடுத்தார். ஆனால், அந்த படம் படுமோசமாக இருந்ததால் கடும் விமர்சனத்திற்குள்ளானது. இதையடுத்து மாமன்னன் படத்தில் நடித்தார். அந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் மிகவும் பாராட்டை பெற்றது.
பெரிய சம்பளம்: மாமன்னன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த போதும், வடிவேலுவிற்கு எதிர்பார்த்த அளவிற்கு படவாய்ப்பு இல்லாததால், சன் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்க இருக்கும் டாப்பு குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் வடிவேலு களமிறங்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வடிவேலு, பெரிய தொகையை சம்பளமாக கேட்டுள்ளாராம். அவர் கேட்பது பெரிய தொகை என்பதால், சன் தொலைக்காட்சி ஆலோசித்து வருவதாகவும், ஆனால், வடிவேலு சம்பள விஷயத்தில் கறாராக இருப்பதாக பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.
டாப்பு குக்கு டூப் குக்கு: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் டாப்பு குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கி உள்ளார். கோமாளியாக இருந்த பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ ப்ரோமோ வெளியானது.


Click it and Unblock the Notifications











