நகைச்சுவை நடிகர் வடிவேலு வீட்டில் நடந்த சோகம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!
சென்னை: நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தம்பி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
நகைச்சுவை ஜாம்பவானான வடிவேலுவின் நகைச்சுவையைப் பார்த்து மயங்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தனது உடல்மொழி, நடை, உடை, பாவனை, வசன உச்சரிப்பு என அனைத்து வகையிலும் ரசிகர்களை வெடித்துச் சிரிக்க வைப்பார்.

எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும், ஆல் டைம் பேவரைட் நகைச்சுவை நடிகர் என்றால் அது வடிவேலுதான்.
நடிகர் வடிவேலு: நகைச்சுவையில் கலக்கி வந்த வடிவேலு தான் ஒரு காமெடி நடிகர் மட்டுமில்லை, ஒரு குணசித்திர நடிகர் என்பதை மாமன்னன் படத்தில் மாமன்னன் கதாபாத்திரத்தில் நடித்து நிரூபித்து விட்டார். இந்த படத்தில் வடிவேலுவின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நயமாக நடித்திருந்தார்.
சந்திரமுகி2: மாமன்னன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது சந்திரமுகி 2 பாகத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே சந்திரமுகி முதல் பாகத்தில் முருகேசனாக நடித்திருந்த வடிவேலு இரண்டாம் பாகத்திலும் கலக்க உள்ளார். இத்திரைப்படம் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வெளியாக உள்ளதால், ப்ரோமோஷன் வேலையில் வடிவேலு பிஸியாக இருக்கிறார்
தம்பி உயிரிழந்தார்: இந்நிலையில், நடிகர் வடிவேலுவின் உடன் பிறந்த தம்பியான ஜெகதீசன் இன்று காலமானார். அவருக்கு வயது 55. கல்லீரல் செயலிழந்ததன் காரணமாக கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தம்பியின் மரணத்தால் வடிவேலு உள்பட அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

கல்லீரல் செயல் இழந்தது: வடிவேலுவின் தம்பியான ஜெகதீசன், மலைக்கோவில் தீபம், காதல் அழிவதில்லை போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அண்ணன் மிகப்பெரிய நடிகராக இருந்த போதும் எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் எளிமையாக வாழ்ந்து வந்த ஜெகதீசன் இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
ஆழ்ந்த இரங்கல்: மூன்று சகோதர்கள் மற்றும் இரண்டு தங்கைகளுடன் பிறந்த வடிவேலு, சினிமாவில் தான் பிரபலமான பின் உடன் பிறந்தவர்களுக்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்துள்ளார். தம்பி ஜெகதீசனின் மறைவால் துயரத்தில் இருக்கும் வடிவேலுவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











