கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் படத்திறப்பு.. நினைவேந்தல் நிகழ்ச்சி கதறி அழுத தொண்டர்கள்!
சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மரணம் திரைத்துறை, அரசியல் தளம் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இவரது உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது. மறைந்த விஜயகாந்தின் உடல் அவரது கட்சி அலுவலகத்தில் புதைக்கப்பட்டது. இந்நிலையில் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் இன்று நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
முன்னதாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு சிறப்பு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜயகாந்தின் மகன்களான சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் இருவரும் கலந்து கொண்டனர். திரைத்துறை சார்பிலும் பல்வேறு முக்கிய நபர்களும் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இதில் விஜயகாந்தின் மூத்த மகன் கண்ணீர் மல்க பேசினார்.

எந்த நடிகர் சங்க நிகழ்ச்சியிலும் நானும் சண்முக பாண்டியனும் கலந்து கொண்டதில்லை. எங்களுடைய முதல் நிகழ்ச்சியே இப்படி ஒரு நிகழ்வாக மாறிப் போனது மனதுக்கு கஷ்டமா இருக்கு. அதேபோல் அப்பா இல்லாமல் பேசும் முதல் நிகழ்ச்சியும் இதுதான். அதை எப்படி சொல்ல வேண்டும் என தெரியவில்லை. எனது அப்பா விஜயகாந்த் சிறு வயதில் இருந்தே எங்களை கொடுத்து கொடுத்து தான் பழக்கி இருக்கிறார். அது தான் என்னைக்கும் இருக்கு. நிறைய பேர் இன்னைக்கு கேப்டன் இல்ல. என்ன நடக்க போகுதோ என நினைக்கிறார்கள். எங்கப்பா உங்களுக்காக தான் எங்களை விட்டு விட்டு சென்று இருக்கிறார். அவரின் கனவை நிறைவேற்ற தான் விஜய பிரபாகரனும் சண்முக பாண்டியனும் இருக்கோம் என்றார்.
இதையடுத்து, புரட்சி கலைஞர் கேப்டன் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்கள் கட்சித் தொண்டர்கள் என விஜயகாந்தை நினைவு கூர்ந்து கதறி அழுது வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











