கத்தி இட்லியும், கம்யூனிச கொள்கையும்!
சென்னை: தமிழ் சினிமாவில் சமீப காலமாக கம்யூனிச சித்தாந்தங்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளன.
தமிழ் சினிமா பெரும் பணக்காரர்களால் தயாரிக்கப்பட்டு வந்தாலும், முதலாளித்துவத்துக்கு எதிராகவும், பொது உடமை சமுதாயத்துக்கு ஆதரவாகவும், கம்யூனிச சித்தாந்தங்களுக்கு ஆதரவாகவும் பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் களமிறங்கியுள்ளது தமிழ் திரையுலகின் ஆரோக்கியமான போக்கை காண்பிக்கிறது.
சமீபத்தில் வந்த சில திரைப்படங்களை உதாரணமாக கொண்டால் பொது உடமையின் முக்கியத்துவத்துக்கு தமிழ் படைப்பாளிகள் தங்களது பங்களிப்பை அளித்து வருவதை தெரிந்துகொள்ளலாம்.

அன்பே சிவம்
காமெடி சப்ஜெக்ட் இயக்குநரான சுந்தர்.சி அழுத்தமாக கதையிலும் தன்னால் சாதிக்க முடியும் என்று முத்திரை பதித்த திரைப்படம் அன்பே சிவம் திரைப்படத்தின் கதைக் களமே முதலாளித்துவத்துக்கு எதிரானதுதான். நாசர் கதாப்பாத்திரம் தனது தொழிலாளிகளுக்கு அளிக்கும் 910 ரூபாய் சம்பளத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவார் கதாநாயகன் கமல்ஹாசன்.

பொது உடமை
'நாட்டுக்கு செய்தி சொல்ல நாகரீக கோமாளி' என்று தொடங்கும் பாடலில், முதலாளித்துவம், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் போன்றவை தோலுரிக்கப்பட்டிருக்கும். அதில் சிவப்பு துணியை கையில் கட்டியபடி கமலஹாசன் பாத்திரம் உள்ளிட்ட பிற தொழிலாளி பாத்திரங்கள் உணர்ச்சிமிகுதியாக நாடகம் நடிக்கும் காட்சி உள்ளது. அதுமட்டுமின்றி, கதிர் அரிவாளையும், சுத்தியலையும் ஓவியமாக வரைந்து நாசர் கதாப்பாத்திரத்தின் முகத்தில் கதாநாயகன் கரி பூசுவது போன்ற காட்சியும் அதிலுள்ளது.

இம்சை அரசன்
இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படத்தில், கோமாளி மன்னன் கதாப்பாத்திரத்தில் நடித்த வடிவேலு, வெளிநாட்டு கோலா நிறுவனங்களுக்கு உறுதுணையாக இருப்பதையும், ஹீரோ வடிவேலு, அவற்றை சீர்திருத்தி அனைத்தையும் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதையும் காட்டியிருந்தது. இப்படத்தை சிம்புதேவன் இயக்கியிருந்தார்.

அரிவாள், சுத்தி
ஜனநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்த, பேராண்மை திரைப்படத்தில் 'காட்டு புலி' என தொடங்கும் பாடலில் ஹீரோவும், நடிகை ஒருவரும் கதிர் அறுக்கும் அரிவாளும், சுத்தியலுமாக நிற்பார்கள். படம் முழுக்கவுமே ஆங்காங்கு, கம்யூனிச சித்தாந்த வசனங்கள் இடம் பெற்றிருக்கும்.

கத்தியும் இட்லியும்
இந்த திரைப்படங்களால் மக்கள் மனதில் ஏற்பட்ட தாக்கத்தைவிட, தீபாவளிக்கு வெளியாகியுள்ள கத்தி திரைப்படத்தின் பொது உடமை கருத்துக்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக இட்லி, கம்யூனிசம் போன்ற வார்த்தைகள் ஆங்காங்கு காணப்படுகின்றன. கம்யூனிஸ்ட் தலைவர்களால் கொண்டு செல்ல முடியாத கம்யூனிச கருத்துக்கள், முருகதாசின் ஒரே டயலாக், விஜய் உச்சரித்த பிறகு தீயாய் பரவியுள்ளன.

விஜய் டயலாக்
கத்தி திரைப்படத்தில் கம்யூனிச காட்சிகள் வலிந்து காண்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம், ஜீவானந்தம் கதாப்பாத்திரத்தில் நடித்த விஜயிடம் அவரது தங்கை வந்து கம்யூனிசம் என்றால் என்ன, சுருக்கமாக சொல்லுங்களேன் என்று கேட்கும். அதற்கு விஜய் "நமது வயிறு நிரம்பிய பிறகு நாம் சாப்பிடும் இட்லி நம்முடையது கிடையாது" என்று சொல்வார். ஒருவரே அனைத்தையும் அபகரித்துக்கொள்ளும் முதலாளித்துவத்துக்கு எதிரான சம்மட்டியடி இந்த வசனம். தியேட்டரில் அப்ளாஸ் அள்ளியது.

பரவுது கம்யூனிசம்
இதைத்தொடர்ந்து இட்லியுடன் கம்யூனிசத்தை இணைத்து, பாசிட்டிவாகவும், கேலிக்காகவும் சமூக வலைத்தளங்களில் இந்த வசனம் பரிமாறப்பட்டு வருகிறது. எப்படியோ, கம்யூனிசம், பொது உடமை சமுதாயம் குறித்த பார்வையை இந்த காட்சி மக்களிடம் உருவாக்கியுள்ளது. இதேபோல மற்றொரு காட்சியில், விஜய் அருகே, கார்ல் மார்க்ஸ் எழுதிய புகழ் பெற்ற 'மூலதனம்' புத்தகம் இருப்பது போல திரையில் காண்பிக்கப்படும். இட்லி உதாரணம், மற்றும் மூலதனம் புத்தகம் இரண்டுமே அந்தந்த காட்சிகளுக்கு அவசியமில்லாத போதிலும், இயக்குநர் முருகதாஸின் வலியுறுத்தலால் வைக்கப்பட்டது போலவே தெரிந்தது.

சிகப்பு சட்டையில் விஜய்
இதன்மூலம், பொது உடமை கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முருகதாஸ் முயன்றுள்ளார். இதை படைப்பாளிகள் மத்தியிலான ஒரு ஆரோக்கிய போக்காகவே சமூக ஆர்வலர்கள் பார்க்கிறார்கள். கத்தியில் விஜய் கேரக்டர் அணியும் சிகப்பு சட்டையும் இதை நோக்கிய பார்வையே என்கின்றனர் முன்னணி சினிமா விமர்சகர்கள்.


Click it and Unblock the Notifications











