சூர்யா படத்தை திரையிடக்கூடாது என மிரட்டுவதா? பாமக-வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
சென்னை: சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பாமகவைச் சேர்ந்தவர்கள் சில மாவட்டங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, சத்யராஜ், வினய், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகி உள்ளது எதற்கும் துணிந்தவன்.
பெண்களுக்கான பாதுகாப்பையும், மிரட்டலை கண்டு பெண்கள் அஞ்சக் கூடாது என்கிற வலுவான கதையுடன் கமர்ஷியல் கலந்து இந்த படம் உருவாகி உள்ள நிலையில், ரசிகர்கள் தியேட்டர்களில் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

தியேட்டர்களுக்கு மிரட்டல்
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை காரணமாக எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிடக் கூடாது என சில மாவட்டங்களில் பாமகவினர் மிரட்டல் விடுத்துள்ளனர் என்றும் சில தியேட்டர் உரிமையாளர்கள் எதற்கும் துணிந்தவன் படத்தை வெளியிடுவதில் இருந்து திடீரென பின் வாங்கினர் என்றும் தகவல்கள் வெளியாகின.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
இந்நிலையில், இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது, அந்த கடிதத்தில் இடம்பெற்றிருப்பதை இங்கே பார்ப்போம். "திரைக்கலைஞர் சூர்யா உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள "எதற்கும் துணிந்தவன்" என்ற திரைப்படம் 10.3.2022 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாமக-வைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள திரையரங்கு உரிமையாளர்களைச் சந்தித்து நடிகர் சூர்யா நடித்துள்ள இந்தப் படத்தை திரையிடக்கூடாது என கடிதம் கொடுத்து மிரட்டி வருகின்றனர்.

சூர்யா விளக்கம்
நடிகர் சூர்யா ஜெய்பீம் என்ற சிறந்த திரைப்படத்தில் நடித்ததோடு அந்தப் படத்தை தயாரித்தும் வெளியிட்டிருந்தார். இந்தப் படம் வெளியானபோது பாமகவினர் பல்வேறு வகையான மிரட்டல்களை விடுத்தனர். எந்தவொரு தனிப்பட்ட பிரிவினரையும் இழிவுபடுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லையென படத்தின் இயக்குநர் தெளிவுபடுத்திவிட்டார். நடிகர் சூர்யாவும் உரிய விளக்கமளித்தார்.

பகிரங்க மன்னிப்பு
ஆனாலும், சூர்யா பகிரங்க மன்னிப்புக் கேட்கும் வரை அவர் தொடர்புடைய எந்தத் திரைப்படத்தையும் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என பாமகவினர் மிரட்டுவது கலைச் சுதந்திரத்திற்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் எதிரானது. தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நோக்கமுடையது. ஜெய்பீம் திரைப்படக் கலைஞர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு விழா நடத்தி ஊக்குவித்தது. இத்தகைய திரைப்படங்கள் மென்மேலும் வரவேண்டியது காலத்தின் தேவையாகும்.
Recommended Video

சட்டம் ஒழுங்கு
இந்நிலையில், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செயலில் ஈடுபடுவதை பாமக நிறுத்திக் கொள்ள வேண்டும். பாமகவின் இச்செயலுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் வலுவாக கண்டன குரலெழுப்ப வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. மேலும் நடிகர் சூர்யாவின் திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாவதற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும் தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கேட்டுக் கொள்கிறது என அதன் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.


Click it and Unblock the Notifications











