நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா.. கொரோனா விதிமுறை மீறி கூட்டம் கூட்டுவதா? போலீஸில் புகார்!
கொச்சி: மலையாள நடிகர் சங்க அலுவலக கட்டிடத் தொடக்க விழாவில் விதிமுறையை மீறி அதிகமானோர் கலந்துகொண்டதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள நடிகர் சங்கமான அம்மாவுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் அருகிலுள்ள கலூரில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

நடிகை ஹனிரோஸ்
ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால், நடிகர்கள் மம்மூட்டி, நடிகை ஹனிரோஸ் உட்பட பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். இதில் பேசிய நடிகர் மோகன்லால், சினிமாதுறையின் வளர்ச்சிக்கு இந்த அலுவலகம் தனது சிறப்பான பங்களிப்பை அளிக்கும் என்று நம்புவதாகக் கூறினார் .

சாதாரண விஷயமல்ல
அவர் மேலும் கூறும்போது, கடந்த 25 வருடமாக ஒரு சங்கத்தை வெற்றிகரமாக நடத்தி வருவது சாதாரண விஷயமல்ல. இந்த சங்கம் பல சவால்களை சந்தித்து இருக்கிறது. இங்கு 498 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரின் அன்பும் ஆதரவும் தொடர்ந்து இந்த சங்கத்துக்கு தேவை.

கொரோனா விதிமீறல்
இந்த சங்கம் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தொடர்ந்து செய்துவருகிறது. இந்தியாவின் சிறந்த சங்கங்களில் ஒன்றாக இது செயல்பட்டு வருகிறது' என்றார். நடிகர் மம்மூட்டியும் பேசினார். இந்த சங்கத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி, ஏசி அறையில் 150-க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டதாக போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.

நடவடிக்கை வேண்டும்
இளைஞர் காங்கிரஸ் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள இந்த புகாரில், விதிமுறைகளை மீறி அதிகமானவர்கள் ஏசி அறையில் கலந்துகொண்டதன் மூலம் கொரோனாவை பரப்ப வழிவகை செய்துள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











