'நோட்டா' படத்திற்கு தடை விதிக்கக் கோரி புகார்: காரணம் பயங்கரமா இருக்கே!
சென்னை: நோட்டா படத்திற்கு தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா நடித்துள்ள முதல் தமிழ் படமான நோட்டா வரும் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. படம் தமிழ் தவிர்த்து தெலுங்கிலும் ரிலீஸாகிறது.
இந்நிலையில் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம்
நோட்டா படத்திற்கு தடை விதிக்கக் கோரி தணிக்கை குழு முன்னாள் உறுப்பினர் ஜெகதீஸ்வர் ரெட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த படத்தை பார்த்தால் தேர்தலில் மக்கள் நோட்டாவை தான் அதிக அளவில் தேர்வு செய்வார்கள். நோட்டாவை ஊக்குவிக்கும் வகையில் படம் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஓட்டு
ஓட்டுபோட விரும்பாத வாக்காளர்கள் தங்கள் வாக்கை நோட்டாவில் பதிவு செய்யலாம் என்பது வழக்கம். நோட்டா படம் வேட்பாளர்களை தேர்வு செய்ய விரும்பாதவர்கள் செயலை ஊக்குவிப்பதுபோல் உள்ளது. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. எல்லோரும் நோட்டாவில் வாக்கை பதிவு செய்தால் தேர்தல் குழப்பமாகி விடும். தெலுங்கானாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த படத்தை பார்த்தால் நோட்டாவில் வாக்குப்பதிவு செய்வார்கள். போலீஸ் டி.ஜி.பி, தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் படத்தை பார்த்த பிறகே திரையிடுவது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று ஜெகதீஸ்வர் ரெட்டி தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய்
நோட்டா படம் அரசியலமைப்பை பற்றியது தான். தவறு செய்த அரசியல்வாதிகள் இந்த படத்தை பார்த்தால் உறுத்தும். தவறு செய்யாதவர்கள் மக்களோடு மக்களாக சேர்ந்து படத்தை பார்த்து ரசிக்கலாம் என்று விஜய் தேவரகொண்டா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் படத்திற்கு தடை விதிக்கக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள்
நோட்டா படத்தை எதிர்த்து அரசியல்வாதிகள் புகார் அளிக்க முடியாத வகையில் பேசினார் விஜய். இந்நிலையில் தான் தணிக்கை குழு முன்னாள் உறுப்பினர் அதுவும் படம் ரிலீஸாக இரண்டு நாட்கள் உள்ள நிலையில் தடை விதிக்கக் கோரி புகார் அளித்துள்ளார். அவரின் புகாரை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











