குழந்தைகளை ஏவிவிட்ட விஜய்.. புகார் கொடுத்த குழந்தையின் தந்தை.. சரியா போச்சு போங்க
கோவை; நடிகர் விஜய் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளை ஓட்டுப் பொறுக்கும் கருவியாக பயன்படுத்தி உள்ளார், என்று கோவையைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அதாவது விஜய் தனது பிரசாரத்தின் போது குறிப்பாக கடைசி பிரசாரத்தின் போது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள் எப்படி உங்களுக்கு ஒரு சாக்லேட் வேண்டும் என்றால் பெற்றோர்களிடம் அடம் பிடித்து, அந்த சாக்லேட்டை வாங்குகிறீர்களோ, அதே போல் விஜய் மாமாவிற்கு விசில் சின்னத்தில் உங்கள் பெற்றோர்களை ஓட்டு போட சொல்லுங்கள். அதற்காக நீங்கள் அடம் பிடியுங்கள் என்று பேசி இருந்தார்.
விஜய்யின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இதனை பார்த்த குழந்தைகள் பலரும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க, தங்களது பெற்றோர்களிடம் கோரிக்கை வைப்பதும், அடம் பிடிப்பதும், சண்டை செய்வதும் உள்ளிட்ட பல வீடியோக்களை பார்க்க முடிந்தது. குழந்தைகள் மட்டும் இல்லாமல் முதல் தலைமுறை வாக்காளர்களும் கூட தங்களது பெற்றோர்களிடம் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்கு செலுத்த கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர்.

ஓட்டு பொறுக்கும் மெஷின்: தற்போது கோவையைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டரணி அமைப்பாளர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் இந்த விவகாரத்தில் விஜய் மீது தொடுக்கப்பட்ட முதல் புகாராக இருக்கிறது. காவல்துறையில் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குழந்தைகளை ஓட்டுப் பொறுக்கும் கருவியாக மாற்றி உள்ளார். எனது வீட்டில் எனது மகன் என்னை தமிழக வெற்றி கழகத்திற்கு ஓட்டு சென்று சொல்லி அடம் பிடிக்கிறான். தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஓட்டு போட்டால் தான் சாப்பிடுவேன், படிப்பேன், தூங்குவேன் என்று தொடர்ந்து அடம் பிடித்துக் கொண்டே இருந்தான். நான் விசில் சின்னத்திற்கு தான் வாக்கு செலுத்தினேன் என்று பொய் சொல்லி அவனை சமாதானப்படுத்தி உள்ளேன்.
விஜய் மீது நடவடிக்கை: எனது வீட்டில் இந்த நிலைமை வரும்போது, தமிழ்நாடு முழுவதும் எத்தனை பெற்றோர்கள் இந்த இன்னலுக்கு, மனநிலைக்கு ,நெருக்கடிக்கு ஆளாகி இருப்பார்கள். இப்படியான சூழலை உருவாக்கிய விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விஜய் இது போல பேசிய வீடியோவை இணையத்திலிருந்து முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். மேலும் குழந்தைகளை ஓட்டுப் பொறுக்கும் கருவியாக பயன்படுத்திய விஜய் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். ஏற்கனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சல் மற்றும் தபால் வாயிலாகவும் புகார் அளித்துள்ளேன். தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன், உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நீதிமன்றத்தையும் நாட நான் தயாராக இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications