நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தில் மனிதஉரிமை மீறல்...புகார் வரை போயிடுச்சே
சென்னை : நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நானும் ரெளடி தான் படத்தில் இணைந்து பணியாற்றிய போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையே காதல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மிக பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது.
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் மிக கட்டுப்பாடுகளுடன், இவர்களின் திருமணம் நடைபெற்றது. திரையுலகை சேர்ந்த விஐபி.,க்கள் சிலர் மட்டுமே அழைக்கப்பட்டனர். மொத்தம் 200 பேர் வரை இந்த திருமண விழாவில் பங்கேற்றனர்.

திருமண பிளானில் மாற்றம்
முதலில் திருமணத்தை சிம்பிளாக திருப்பதியில் நடத்தலாம். முக்கியமான சில விஐபி.,க்களை மட்டுமே கூப்பிட நயன்தாரா - விக்னேஷ் முடிவு செய்திருந்தார்கள். பல காரணங்களால் திருப்பதியில் திருமணத்தை நடத்த முடியாமல் போனதால் திருமண பிளானை மொத்தமாக மாற்றி, மாமல்லபுரத்தில் நடத்தினர்.

பயங்கர கெடுபிடி
இந்த திருமண நிகழ்வு உரிமை தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. திருமணம் நடைபெறும் இடத்தை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அலங்காரம் முதல் சமையல் வரையிலான அனைத்தையும் கவனிக்க 8 குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பிற்காக மும்பையில் இருந்து 80 பவுன்சர்கள் அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.

யாருக்கும் அனுமதி கிடையாது
திருமண அழைப்பிதழில் பார் கோடு ஸ்கேன் செய்த பின்னரே விஐபி உள்ளிட்ட அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். விஐபிக்கள் உள்ளிட்ட திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரின் மொபைல் போன்களும் வாசலிலேயே வாங்கி வைத்துக் கொள்ளப்பட்டது. மேலும் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக அந்த விடுதிக்கு வெளியில் உள்ள சாலையில் கூட பொதுமக்களையும், பத்திரிக்கையாளர்களையும் அனுமதிக்க மறுத்தனர்.

ரோட்டில் கூட யாரும் நடக்க கூடாதா
நட்சத்திர விடுதியின் பின்புறமுள்ள கடற்கரை பகுதிக்கு கூட பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுமக்கள் தனியார் பாதுகாவலரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நயன்தாரா கல்யாணம் என்றால் ரோட்டில் கூட யாரும் நடக்கக் கூடாதா என பலர் கோபமாக வாக்குவாதம் செய்ததாக அந்த சமயத்திலேயே செய்திகள் வந்தன.

மனித உரிமை ஆணையத்தில் புகார்
இந்த நிலையில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் சமூக ஆர்வலர் சரவணன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கடற்கரை என்பது பொதுவான இடம். அந்த இடத்தில் நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த இடத்திற்குள் பொதுமக்களை அனுமதிக்காதது மனித உரிமையை மீறிய செயல் என தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.
Recommended Video

அடுத்த நாளே திருப்பதியில் பிரச்சனை
திருமணம் முடிந்த மறுநாளே திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற இடத்தில் கோயில் முன் போட்டோஷுட் நடத்திய போது, தடை செய்யப்பட்ட பகுதியில் காலில் செருப்பு அணிந்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சுற்றி வந்த போட்டோக்கள் வெளியாகி சர்ச்சையானது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்த போது, தெரியாமல் நடந்த தவறு என மன்னிப்பு கடிதம் அனுப்பி அந்த பிரச்சனைக்கு முடிவு கட்டினார் விக்னேஷ் சிவன்.


Click it and Unblock the Notifications











