'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் காட்சிகளுக்கு தடை கோரி கமிஷனரிடம் மனு!
சென்னை போலீஸ் கமிஷனரிடம், தமிழ்நாடு இந்து மகாசபா என்ற அமைப்பு சார்பில் கொடுத்த புகார் மனுவில், 'நடிகர் சந்தானம், சீனிவாசன் உட்பட பலர் நடித்துள்ள கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படம் அண்மையில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ராமநாராயணன், நடிகர் சந்தானம் ஆகியோர் கூட்டாக தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில், சந்தானம், சீனிவாசன் மற்றும் ஹீரோவாக நடித்திருப்பவர்கள் குடிபோதையில் கையில் லட்டை வைத்துக்கொண்டு, அம்மன் சாமியிடம் இருந்து சூலாயுதம், கிரீடம், அம்மனின் இடுப்பில் உள்ள ஒட்டியாணம் ஆகியவற்றை பறிப்பதுபோல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அதுபோல, பெண் போலீஸ் அதிகாரியின் இடுப்பை பிடித்து, பெல்ட்டை கழற்றுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சிகள் மூலம் அம்மனையும், பெண் போலீஸ் அதிகாரியையும் அவமானப்படுத்தியுள்ளனர். குறிப்பாக இந்த காட்சிகளினால், இந்து மதத்தை சேர்ந்த மக்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளனர். எனவே இந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்து கடவுளை அவமானப்படுத்தி படம் தயாரித்துள்ள தயாரிப்பாளர்கள் ராமநாராயணன், சந்தானம் ஆகியோர் வீட்டுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்யபோவதாக தமிழ்நாடு இந்து மகா சபை நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications












