தமிழ் சினிமாவின் குறிஞ்சிப்பூ இவள்... 'அருவி' ஹீரோயின் அதிதி!
Recommended Video

சென்னை : தமிழ் சினிமாவில் இப்படியொரு நடிகையா என்று வியக்கவைக்கும் அளவுக்கு அறிமுகமாகி உள்ளார் 'அருவி' படத்தின் ஹீரோயினான அதிதி பாலன்.
பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருது பெற்று நேற்று வெளியாகி உள்ள 'அருவி' படத்திற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
'அருவி' படத்திற்கு கிடைக்கும் இவ்வளவு பாராட்டுகளுக்குச் சொந்தக்காரி படத்தில் அருவியாக நடித்திருக்கும் அதிதி பாலன் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

ஆடிஷனில் தேர்வு
முன்னணி நடிகைகள் மூன்று பேரிடம் இந்தப் படத்திற்காக நடிக்கக்கேட்டு சரிவராததால் புதுமுகத்திற்கு ஆடிஷன் வைத்தார்கள். 500 பேர் கலந்துகொண்ட ஆடிஷனில் தேர்வாகி 'அருவி' படத்தில் இடம்பிடித்தவர் இந்த அதிதி பாலன்.

வக்கீல் பொண்ணு
சென்னையைச் சேர்ந்த அதிதி, பெங்களூரில் சட்டம் படித்தவர். நடிப்பில் சிறுவயதிலிருந்தே ஆர்வம் அதிகமிருந்ததால் வக்கீல் தொழிலுக்குச் செல்லாமல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். நண்பர் ஒருவர் சொன்னதற்காக அருவி ஆடிஷனில் கலந்துகொண்டாராம்.

அதிதி பாலன்
அனுபவம் வாய்ந்த நடிகைகளே இப்படி ஒரு நடிப்பை நடித்திருப்பார்களா எனக் கேட்கும் அளவுக்கு, முதல் படத்திலேயே யாரும் ஏற்கத் துணியாத ஒரு கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து பல இடங்களில் கைதட்டல்களை வாங்கியிருக்கிறார் அதிதி.

தனி ஒருத்தியாக
'அருவி' படம் முழுக்க முழுக்க அருவியாகிய பெண்ணையே சூழ்ந்திருக்கிறது. அலங்காரமற்ற யதார்த்த அழகில் அசரடிக்கிறாள் இந்த அருவி. இளம்பெண்களுக்கே உரிய குறும்புத்தனம், காதல் பார்வை என ரசிகர்களை வசீகரிக்கிறாள்.

செம பெர்ஃபார்மன்ஸ்
சிரிப்பு, ஏக்கம், பயம் என ஒவ்வொரு உணர்வுகளையும், அலட்டல் இல்லாமல் அடுத்தடுத்து முகத்தில் காட்டி தேர்ந்த நடிகை என்பதை நிரூபிக்கிறார் அருவி. படத்தின் இறுதிக் காட்சிகளில் உடல் இளைத்து, குறுகி, நோயாளியாக வரும் தோற்றத்தில் பதற வைக்கிறார்.

குறிஞ்சிப்பூ
அதிதி பாலன் போன்ற நடிகைகள் எப்போதாவது சினிமாவிற்கு கிடைக்கும் குறிஞ்சிப்பூ. ஆண்டின் இறுதியில் தமிழ் சினிமாவில் களமிறங்கியிருக்கும் ஒரு வியத்தகு நடிகையான அதிதி, நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











