கமலுக்கு "வெளிநாட்டு மாப்பிள்ளை" ரெடி... 2015ல் மருதநாயகம் "ஸ்டார்ட்"!
சென்னை: நிதிப்பிரச்சினை காரணமாக பாதியில் கைவிடப்பட்ட மருதநாயகம் படத்தை மீண்டும் தொடங்க இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் சூசகமாக தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தானே இயக்கி, நடித்து தயாரிப்பதாக அறிவித்து 1997ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் மருதநாயகம். இப்படத்தின் தொடக்க விழாவில் இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் பங்கேற்றார். மிகப் பிரம்மாண்டமான முன்னோட்டக் காட்சிகள், தொடக்கவிழா என அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய மருதநாயகம் படம், நிதிப்பிரச்சினை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.
ஏற்கனவே, 30 நிமிடக் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்ட நிலையில், அப்படத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்ற தயாரிப்பாளர் முன்வந்தால், அப்பட வேலைகள் மீண்டும் தொடங்கப் படும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது லண்டனில் உள்ள கமலின் நண்பர் ஒருவர் மருதநாயகத்தை தயாரிக்க முன் வந்துள்ளாராம். இத்தகவலை கமலே செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

லண்டன் தயாரிப்பாளர்...
இது தொடர்பான கேள்விக்கு கமல் அளித்துள்ள பதிலில், ‘லண்டனில் உள்ள தனது நண்பர் தொழிலதிபர் ஒருவர் அப்படத்தை தயாரிக்க விரும்புவதாக கூறியிருக்கிறார். "பட்ஜெட் அதிகமாச்சே என்று கேட்டேன்.

என் கவலை...
அது என் கவலை. அத்தனை செலவையும் அந்தப் படம் தாங்கும். நானும் தான்" என்று கூறியிருக்கிறார்' எனத் தெரிவித்துள்ளார்.

விரைவில் தொடக்கம்...
கமலின் இந்த பதிலால், 'மருதநாயகம்' எந்த நேரத்திலும் தொடங்கப்படும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கமல் நடிப்பில் விஸ்வரூபம் 2, உத்தமவில்லன் மற்றும் பாபநாசம் என மூன்று படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்பது குறிப்பிடத்தக்கது.

5 மொழிகளில்...
மருதநாயகம் படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, இங்கிலீஷ் மற்றும் பிரெஞ்ச் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இப்படத்தில் மருதநாயகம் பிள்ளை என்ற கதாபாத்திரத்தில் கமல் நடிக்க, சத்யராஜ், நாசர், பசுபதி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இப்படத்தில் நாயகியாக நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகை கேட் வின்ஸ்லெட் மறுத்து விட்டது நினைவு கூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











