திருமாவளவனுக்கு ஆதரவாக பா. ரஞ்சித்.. அதிமுக கூட்டணிக்கும் ஆதரவு போஸ்ட்.. விமர்சிக்கும் நெட்டிசன்கள்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணிக் கட்சிகள், அதிமுக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர், தவெக என நான்கு முனைப் போட்டியாக களம் சூடாக உள்ளது. இப்படி இருக்கையில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் எக்ஸ் தள பதிவுகளை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
அதாவது அதிமுக கூட்டணியில் போட்டியில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஆதரவாகவும், திமுக கூட்டணியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு ஆதரவாகவும் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர் வடிவேலுவின் காமெடியான, ஏணிச் சின்னத்தில் ஒரு குத்து, தென்னை மரச் சின்னத்தில் ஒரு குத்து என கலாய்த்து வருகிறார்கள்.
இயக்குநர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில், திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளனுக்கு ஆதரவாக, " விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட போவதாக வந்த அறிவிப்பு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாக உள்ளது.
தமிழகத்தின் சமகால அரசியல் சூழலையும், சமூகநீதி சார்ந்த எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இம்முடிவு முக்கியமானதும் பொருத்தமானதும் ஆகும். தமிழக சட்டமன்றத்தில் சாதி ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள் போன்ற விடயங்களில் அவரது குரல் வலிமையாக ஒலிக்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது.

ஜனநாயகத்தை காக்கவும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்கள் மகத்தான வெற்றியடைய வாழ்த்துகள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டு களம் காணவிருக்கும் அனைவரும் சட்டமன்றத்தில் அண்ணன் அவர்களது தலைமையில் வலுவான குரலாக ஒலித்திட வாழ்த்துகள், மகிழ்ச்சி" என்று பதிவிட்டுள்ளார்.
அதிமுக கூட்டணி: அதேபோல் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் பொற்கொடு ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஆதரவாக " எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை
பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங்.
பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்: கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது.

இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது.
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம் " என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவைப் பார்த்த பலரும் ரஞ்சித் ஏன் இப்படி குழப்புகிறார் என்றும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











