சமுத்திரக்கனியின் மலையாள படத்துக்கு தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் காங். புகார்
திருவனந்தபுரம்: இயக்குநர் சமுத்திரக்கனி நடித்துள்ள மலையாளப் படமான 'வசந்தத்தின்டே கனல் வழிகள்' கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக உள்ளதால், அப்படத்திற்கு தடை விதிக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் மனு கொடுத்துள்ளது.
கேரளாவில் வரும் ஏப்ரல் 10ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக சாலக்குடி தொகுதியில் மலையாள நடிகர் இன்னசென்ட் போட்டியிடுகிறார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சில மலையாள படங்களின் போஸ்டர்கள், அவரது தொகுதியில் ஒட்டப்பட்டுள்ளன. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணானது எனக் கூறி தேர்தல் ஆணையத்திடம் சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் புகார் கொடுத்தது.
ஆனால், அதை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. இந்நிலையில், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகியுள்ள மலையாளப் படத்திற்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் புதிய மனு ஒன்றை தேர்தல் ஆணையத்தில் வழங்கியுள்ளது.

சமுத்திரக்கனியின் மலையாளப்படம்...
சமுத்திரக்கனி, முகேஷ், தேவன், பரணி மற்றும் பலர் நடித்து சமீபத்தில் வெளிவந்த மலையாளப் படம் ‘வசந்தத்தின்டே கனல் வழிகள்‘. இந்த படத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

காங். குற்றச்சாட்டு....
எனவே, இப்படத்தை பார்க்கும் வாக்காளர்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், படத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனதேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் ஒன்றை அளித்துள்ளது.

நோட்டீஸ்...
எனவே, இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் விஷார்த், இயக்குனர் அனில் வி.நாகேந்திரன் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சுதந்திரப்போராட்ட கதை....
இப்பிரச்சினை குறித்து அனில் நாகேந்திரனிடம் கேட்கப்பட்ட போது, ‘இந்த படம் சுதந்திரப் போராட்டம் குறித்த கதை. சுதந்திரத்துக்கு முன் கேரளாவில் தொழிலாளிகள் பட்ட துன்பங்கள் குறித்தும், கேரளாவில் வாழ்ந்த கிருஷ்ண பிள்ளை என்ற தொழிலாளர் தலைவர் குறித்தும்தான் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

உண்மைச் சம்பவம்...
கேரளாவில் நடந்த சம்பவங்கள்தான் படத்தில் காட்டப்பட்டுள்ளன. எனவே, படத்திற்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை' என விளக்கமளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











