சித்தவைத்திய சிகாமணி பட குத்துப் பாட்டுகளைப் பார்த்தால் எனக்கே ஆடத் தோன்றுகிறது... கே.பாலச்சந்தர்
சென்னை: தற்கால சினிமாவில் குத்து பாடல்கள் தவிர்க்க முடியாததாகி விட்டதாகத் தெரிவித்துள்ள இயக்குநர் கே.பாலச்சந்தர், விரைவில் ரிலீசாக உள்ள ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தில் வரும் குத்துப் பாடல்களைப் பார்த்தால் தனக்கே ஆடத் தோன்றுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
பரத்-நந்திதா ஜோடியாக நடித்துள்ள புதிய படம், 'ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி.' இந்த படத்தை இயக்குநர் கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி, எஸ்.மோகன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நேற்று காலை நடைபெற்றது. டிரைலரை தொழில் அதிபர் நல்லி குப்புசாமி வெளியிட, டைரக்டர் சரண் பெற்றுக்கொண்டார்.
அதேபோல், பாடல்களை டைரக்டர் கே.பாலசந்தர் வெளியிட, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து விழாவில் கே.பாலசந்தர் பேசியதாவது:-

எனக்குப் பிடிக்காது...
பொதுவாக, குத்து பாடல்கள் எனக்கு பிடிக்காது. ஆனால், ஜனங்கள் ரசிக்கிறார்கள்.

எனக்கே ஆடத் தோன்றியது....
இந்த படத்தில் 3 குத்து பாடல்கள் உள்ளன. அதைப்பார்த்தபோது, நானே ஆடலாம் போல் தோன்றியது.

தவிர்க்க முடியாது..
தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் இந்தக்கால தலைமுறைக்கு தகுந்த மாதிரி படம் எடுக்க வேண்டியிருக்கிறது. அதனால், சினிமாவில் குத்து பாடல்கள் தவிர்க்க முடியாததாகி விட்டது.

சினிமா பித்தர்...
தயாரிப்பாளர்களில் ஆர்.பி.சவுத்ரி, தீவிரமான சினிமா பித்தர். அவர் 86 படங்களை தயாரித்து இருக்கிறார். 86 டைரக்டர்களை அவர் அறிமுகம் செய்து இருக்கிறார்.

உந்து சக்தி...
இது, தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு பெரிய உந்து சக்தி தெரியுமா? தயாரிப்பாளர்கள் கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும்.

கடமை...
திரையுலகுக்கு எந்த அளவுக்கு உதவியாக இருந்திருக்கிறோம்? என்று எல்லா தயாரிப்பாளர்களும் சிந்திக்க வேண்டும்'' என இவ்வாறு அவர் உரையாற்றினார்.

வரவேற்பு...
விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், துணைத்தலைவர் டி.ஜி.தியாகராஜன், டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், நடிகர்கள் பரத், சிபிராஜ், பிருத்வி, தம்பி ராமய்யா, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, கருணாகரன், நடிகை நந்திதா, டைரக்டர் சரண், பட அதிபர்கள் ஏ.எல்.அழகப்பன், கே.எஸ்.சீனிவாசன் ஆகியோரும் பேசினார்கள். முன்னதாக பட அதிபர் புஷ்பா கந்தசாமி வரவேற்று பேசினார். டைரக்டர் எல்.ஜி.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.


Click it and Unblock the Notifications











