விஷாலின் 'துப்பறிவாளன் 2'ல் இருந்து விலகினார்...அடுத்து இதுதான் திட்டம்? கோப மிஷ்கின் கூல் அறிக்கை
சென்னை: துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து விலகிய மிஷ்கின், விரைவில் தனது அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட இருப்பதாகக் கூறியுள்ளார்.
நடிகர் விஷால் 'துப்பறிவாளன்' படத்தில் இரண்டாம் பாகத்தை தயாரித்து நடித்து வருகிறார். இந்தப் படத்தை மிஷ்கின் இயக்கினார்.
ஹீரோயினாக ஆஷ்யா நடிக்கிறார். மற்றும் பிரசன்னா, ரகுமான், கவுதமி, நாசர் உட்பட பலர் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார்.

விஷாலுடன் பிரச்னை
இதன் ஷூட்டிங் லண்டனில் நடந்து வந்தது. ஒரு மாதத்துக்கும் மேல் அங்கு நடந்த படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. படத்தில் நடித்தவர்கள் சமாதானம் செய்து வைத்ததாகவும் கூறப்பட்டது. பின்னர் சில நாட்கள் அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு டிசம்பர் மாதம் படக்குழு சென்னைத் திரும்பியது.

மிஷ்கின் நீக்கம்
அடுத்த ஷெட்யூலுக்கு ரெடியாகிக் கொண்டிருந்த நிலையில் படத்தில் இருந்து திடீரென மிஷ்கின் நீக்கப்பட்டார். விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் ஏற்பட்ட பிரச்னை பெரிதானதை அடுத்து அவரை விஷால் நீக்கியதாகக் கூறப்பட்டது. போட்ட பட்ஜெட்டை விட அதிகமாக ரூ.40 கோடி ஆகும் என்று மிஷ்கின் கேட்டாராம்.

சேட்டிலைட்ல இருந்து
இதுபற்றி மிஷ்கினிடம் கேட்டபோது, கிண்டலாகப் பதிலளித்தார். 'நான் 40 கோடி கேட்கலை. 400 கோடி கேட்டேன். கிளைமாக்ஸுக்கு மட்டும் நூறுகோடி கேட்டிருக்கேன். ஏன்னா, விஷால் சேட்டிலைட்ல இருந்து குதிக்கிற மாதிரி காட்சியை எடுக்கிறோம்' என்று கூறியிருந்தார். இது பரபரப்பானது. இந்நிலையில், தனது அடுத்தப்படம் பற்றி விரைவில் அறிவிக்க இருக்கிறேன் அவர் தெரிவித்துள்ளார்.

கண்மூடித்தனமான
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என தொடர் வெற்றிகளை தந்திருக்கிறேன். இந்தப் படங்களை கண்மூடித்தனமான நம்பிக்கையில் உருவாக்கினேன். இறுதியில் அளவிலா அன்பை பெற்றிருக்கிறேன். 'கண்மூடித்தனாமான நம்பிக்கை, ஆத்மாவின் தேடல்' இரண்டும்தான் வாழ்வின் உள்ளார்ந்த அர்த்தம் என்பதை நம்புவன் நான்.

அடுத்த பயணம்
உண்மை என்னவென்றால் 'பிசாசு' நாயகன் சித்தார்த், 'துப்பறிவாளன்' கணியன் பூங்குன்றன், 'சைக்கோ' கௌதம் அனைவரும் இந்த மந்திரத்தை நம்புபவர்களே. ரசிகர்கள் இதை வாழ்வின் அன்பாக எடுத்து செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம். இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் பணிபுரிந்த நடிக நடிகையர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. விரைவில் எனது அடுத்த பயணம் பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











