செக்ஸ் + அரசியல்... தமிழகத்தைக் கலக்கிய சர்ச்சை சினிமாக்கள்
சென்னை: விஸ்வரூபம் படம் முற்றிலும் வித்தியாசமான ஒரு சர்ச்சையை தமிழகத்தில் கொண்டு வந்து விட்டது. ஆனால் தமிழ் சினிமாவில் சர்ச்சை என்பது புதிதல்ல. இதற்கு முன்பும் கூட சர்ச்சைப் படங்கள் நிறையவே வந்துள்ளன. அதுகுறித்த ஒரு ரவுண்டப்.
செக்ஸ் மற்றும் அரசியலை மையமாக வைத்துத்தான் இதுவரை தமிழ் சினிமாவில் பல சர்ச்சைப் படங்கள் வந்து போயுள்ளன. ஆனால் மத ரீதியான மிகப் பெரும் எதிர்ப்பை சந்தித்த முதல் படம் விஸ்வரூபம் என்று சொல்லலாம்.
விஸ்வரூபத்திற்கு முன்பும் கூட பெரிய சர்ச்சைகள் வெடிக்கத்தான் செய்தன. ஆனால் மத ரீதியான எதிர்ப்புகளை தமிழ் சினிமாவில் எந்தப் படமும் இந்த அளவுக்கு சந்தித்ததில்லை என்றே கூற வேண்டும்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கே.பாலசந்தரைப் போல சர்ச்சைக்குரிய படங்களை யாருமே எடுத்திருக்க முடியாது என்று சொல்லலாம். அப்படிச் சொல்வதற்குப் பதில் நிறைய சர்ச்சைப் படங்களை எடுத்தவர் என்றும் சொல்லலாம். காரணம், அவரது துணிச்சல் மற்றும் தைரியம்தான். புதுமையான முயற்சிகளை கமல்ஹாசனை விட மிகத் தைரியமாக அரங்கேற்றியவர் அவரது குரு பாலச்சந்தர்தான் என்றாலும் மிகையில்லை..

மன்மத லீலை
கைலாசம் பாலச்சந்தர், அதாங்க, நம்ம கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் இது. கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருந்தார். ஏகப்பட்ட நாயகிகள். பெண் பித்தனின் கதை இது.

பாதி நேரம் பிரா- பிளவுஸ்தான்...
இதில் நடித்த நாயகிகள் சேலையை பெரும்பாலும் அணிந்திருக்கவே மாட்டார்கள். பாதி நேரம் பிரா அல்லது பிளவுஸில்தான் காட்சி தருவார்கள். அப்படி ஒரு களேபரக் காட்சிகள் நிறைந்த படம் இது. பெரும் சர்ச்சையைக் கிளப்பியது என்றாலும கூட படம் ஹிட் ஆகிப் போனது.

ஜெயப்பிரதாவின் முதல் லீலை
மன்மதலீலைதான் ஜெயப்பிரதாவுக்கு முதல் படம். இதில் அவர் கண்ணகி என்ற பாத்திரத்தில் நடித்திருப்பார். ராதாரவிக்கும் இதுதான் முதல் படம் என்பது இன்னொரு சுவாரஸ்யமான தகவல்.

ராங் நம்பர் விஜயா...
ஒய்.விஜயா இப்படத்தில் காட்சிய கவர்ச்சியையும், அவரது தொலைபேசிப் பேச்சையும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அவருக்கு ராங் நம்பர் ஒய்.விஜயா என்று பெயரே வந்து விட்டது, படத்தில் அவர் இடம் பெற்ற ஹலோ மைடியர் ராங் நம்பர் பாடலையும், காட்சிகளையும் வைத்து.

செக்ஸ், சமூக அவலம் பேசிய தப்புத்தாளங்கள்
ரஜினிகாந்த், சரிதா இணைந்து நடித்த இன்னொரு பாலச்சந்தர் படம். சரிதா விபச்சாரப் பெண்ணாக நடித்திருப்பார். அவரிடம் வரும் கஸ்டமராக, அதுவும் இந்தி பேசும் கஸ்டமராக கமல்ஹாசன் கெஸ்ட் ரோலில் வந்து போயிருப்பார். இந்தப் படத்திலும் செக்ஸ் மற்றும் சமூக அவலங்களை தனது பாணியில் அலசியிருப்பார் பாலச்சந்தர். இந்தப் படமும் கூட அப்போது சலசலப்பை ஏற்படுத்தியதுதான்.

எம்.ஜி.ஆரைக் கொந்தளிக்க வைத்த தண்ணீர் தண்ணீர்
தண்ணீர் தண்ணீர் வந்தபோது தமிழகமே பதறிப் போய் தியேட்டர்களுக்கு ஓடியது இன்னும் கூட நன்றாக நினைவில் உள்ளது. அந்த அளவுக்கு ஒரு தண்ணீர்ப் பஞ்சத்தை மிக சோகமாக காட்சிப்படுத்தியிருந்தார் இப்படத்தில் பாலச்சந்தர். அதை விட முக்கியமானது இப்படத்தால் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரே கொதித்துப் போய் விட்டார் பாலச்சந்தர் மீது.

கோமல் சுவாமிநாதனின் நாடகம்
கோம்ல சுவாமிநாதன் எழுதிய நாடகம்தான் தண்ணீர் தண்ணீர் என்ற பெயரில் படமானது. அத்திப்பட்டி என்ற கிராமத்தின் கதை இது. அது ஒரு கற்பனைக் கிராமம்தான். ஆனால் நிஜமான கிராமம் போலவே படம் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது, காரணம், அப்போது நிஜமாகவே தமிழகத்தின் பல பகுதிகளில் தண்ணீர்ப் பஞ்சம் நிலவியதால். தண்ணீர்ப் பஞ்சத்துடன் அரசியலையும், அரசியல்வாதிகளையும், ஊழலையும் சேர்த்து வாரியிருப்பார் பாலச்சந்தர். இதனால்தான் எம்.ஜி.ஆர். அப்போது அதிருப்தியடைந்து கோபமாகிப் போனார்.

வில்லங்க காதலைச் சொன்ன அபூர்வ ராகங்கள்
அபூர்வ ராகங்கள் கே.பாலச்சந்தரின் இன்னொரு புதிய முயற்சியைக் காட்டிய படம். தந்தை வயது உடைய ஒருவர் மீது இளம் பெண் காதல் கொள்வதையும், தாய் வயதுடைய பெண் மீது வாலிபன் ஒருவன் காதல் கொள்வதாகவும் இப்படத்தில் பாலச்சந்தர் காட்டியிருப்பார். இதுவும் சர்ச்சையைக் கிளப்பிய படம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வரவை கட்டியம் கூறிய படம் இது. இப்படம் 3 தேசியவிருதுகளையும், 3 பிலிம்பேர் விருதுகளையும் வாரிக் குவித்தது.

அரசியலை தோலுரித்த அச்சமில்லை அச்சமில்லை
அரசியல் அவலங்கல், வெற்றிக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் அரசியல்வாதிகள், தேர்தல் மோசடிகள் உள்ளிட்டவற்றை தோலுரித்துக் காட்டிய படம் அச்சமில்லை அச்சமில்லை. அப்போதே நமது அரசியல் எவ்வளவு கேவலமாக இருந்தது என்பதை அறிய இந்தப் படத்தைப் பார்க்கலாம். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படம் இது. ராஜேஷ், சரிதாவின் அருமையான நடிப்பில் கே.பாலச்சந்தர் உருவாக்கிய படம் இது. வசனங்கள் மிகப் பிரபலம்.

சிந்துசமவெளி
அமலா பால் அறிமுகமான படம் சிந்து சமவெளி. சர்ச்சை இயக்குநர் சாமியின் படம். மாமனார், மருமகள் இடையே கள்ளக் காதல் மூள்வதாக இதில் காட்டியிருந்தார் சாமி. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இப்படத்தால் தற்போது தமிழ் சினிமாவில் ஓரம் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறார் சாமி.

கொழுந்தன், அண்ணி காதல் சொன்ன உயிர்
அதேபோல சாமி எடுத்த இன்னொரு படம் உயிர். இதில் தனது கணவரின் தம்பி மீது அண்ணி ஆசைப்பட்டு, அதை அடைய பல்வேறு முயற்சிகளை எடுப்பதாக காட்டி பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் இயக்குநர் சாமி. இப்படத்திற்கு எதிராக வெடித்துக்கிளம்பிய போராட்டங்களே கடைசியில் படத்திற்கு நல்ல விளம்பரமாகி படம் பெரும் வெற்றி பெற்று விட்டது.
இப்படி நிறையப் படங்கள், நிறைய சர்ச்சைகள்... !


Click it and Unblock the Notifications