Isaivani: சபரிமலைக்கு செல்கிறாரா இசைவாணி? அடுத்தடுத்து உருவாகும் பிரச்சனை!
சென்னை: கானா பாடகி இசைவாணி பாடிய 'ஐ எம் சாரி ஐயப்பா' பாடல் பக்தர்களிடையே பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், சபரிமலைக்கு செல்ல இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகளை கேரளாவில் இருக்கும் அமைப்புகள் செய்து வருவதாகவும் இணையத்தில் செய்திகள் வெளியாகி வருகிறது.
நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்து கொண்ட இசைவாணி ஐயப்பன் குறித்தும், ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்கும் விரதம் குறித்தும் அவர்களின் மனம் புண்படும் வகையில் பாடல் பாடி இருந்தார். இது இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, இசைவாணிக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன.

மனதை புண்படுத்தும் பாடல்: மேலும், இசைவாணி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் மீது கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்து கடவுளையும், வழிபாட்டு முறையையும் கொச்சைப்படுத்தும் வகையில் பாடல் பாடிய இசைவாணி மீதும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நீலம் பண்பாட்டு மையத்தின் தலைவர் பா ரஞ்சித் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினரும் புகார் அளித்து இருந்தனர்.
அறிவு புகட்டி அனுப்பப்பா: இந்த விவகாரம் இணையத்தில் பேசு பொருளாகி புயலை கிளப்பி உள்ளது. கிறிஸ்துவராக இருக்கும் இசைவாணி மற்ற மதத்தினரை புண்படுத்தும் வகையில் பேசியது தவறு என்றும் இணையத்தில் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மூத்த நகரான எம்.எஸ்.பாஸ்கர், இசைவாணி பாடிய பாடலை சபரிமலை அருகே மேடை இட்டு பாடினால், இவர்களுக்கு சிறப்பான பூஜை கிடைக்கும் என்றும், ஐ அம் சாரி ஐயப்பா அறிவு புகட்டி அனுப்பப்பா என்று கூறியிருந்தார். இதே போல, இயக்குநர் மோகன் ஜியும் இசைவாணியை கண்டித்து இருந்தார்.
கடும் அதிருப்தியில் கேரள மக்கள்: இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த இந்துக்களுக்கு எதிரான ஒரு அமைப்பு, கேரளாவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த அனுமதி கேட்டு இருப்பதாகவும், அந்த நிகழ்ச்சிக்காக இசைவாணி சபரிமலைக்கு வரவைத்து பாட வைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் கேரள மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இசைவாணி மீது கடும் கோவத்தில் இருக்கும் கேரள மக்கள், அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். இன்னும் சிலர் இசைவாணி கேரளாவிற்கு வரட்டும், அவருக்கு சரியான பாடத்தை நாங்கள் புகட்டுகிறோம் என இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
விஷமிகளின் வேலை: நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பாலின பாகுபாட்டை முன்வைத்து பெண்களுக்கு உரிமை மறுக்கப்படக்கூடாது என்று தீர்ப்பளித்தது. அந்த நேரத்தில் தான் "ஐ எம் சாரி ஐயப்பா" என்கிற பாடல் உருவானது அன்று முதல் இந்த பாடல் பாடப்பட்டு வருகிறது. அது ஐயப்பன் சம்மந்தப்பட்ட பாடலே இல்ல. பெண்கள் கோயிலில் நுழையும் உரிமை கோரும் பாடலாகும், அந்த உண்மையை மறைத்து, மொத்தப் பாடலும் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிரானதாக சமூக வலைதளத்தில் சில விஷமிகள் பொய்யான செய்தியைப் பரப்பி வருகின்றனர் என்று குறிப்பிட்டு இருந்தார்.


Click it and Unblock the Notifications











