கனிகா கபூர் வீட்டுக்கு ஏன் சீல் வைக்கலை? அதிகாரிகளை விளாசும் அக்கம் பக்கத்தார்.. விடாது கருப்பு!
லக்னோ: கொரோனா வைரஸ் நெகட்டிவ் ஆனதை அடுத்து வீட்டில் இருக்கும் கனிகா கபூரின் வீட்டை ஏன் அதிகாரிகள் சீல் வைக்கவில்லை என அக்கம் பக்கத்தார் புதிய பிரச்சனையை கிளப்பியுள்ளனர்.
பாலிவுட் பிரபலங்களியே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் என்றால் அது பாடகி கனிகா கபூர் தான்.
லண்டன் சென்று திரும்பி வந்த கனிகா கபூர், விமான நிலையத்தில் கொரோனா டெஸ்டிங் செய்துக் கொள்ளாமல் எஸ்கேப் ஆனார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது.
மேலும், கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியான நிலையில், தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு பல முறை கொரோனா சோதனை செய்யப்பட்டது.

சன்னி லியோன் பாட்டு
41 வயதாகும் கனிகா கபூர் பாலிவுட் படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார். சன்னி லியோனின் ராகினி எம்.எம்.எஸ். 2 படத்தில் அவர் பாடிய பேபி டால் பாடல், சர்வதேச அளவில் ஹிட் அடித்த நிலையில், வெளிநாடுகளில் அடிக்கடி கலை நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு பிரபலமானார்.

6 முறை
லண்டனில் இருந்து மும்பை வந்த கனிகா கபூர், தனது சொந்த ஊரான லக்னோவுக்கு சென்று சில இசைக் கச்சேரிகளில் பங்கேற்றார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சஞ்சய் காந்தி மருத்துவமனையில், தனிமைப்படுத்தப்பட்டு கனிகா கபூருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவ்வப்போது கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்ட நிலையில், 5வது முறையாக எடுக்கப்பட்ட டெஸ்டில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வர, 6வது முறையாக டெஸ்ட் எடுக்கப்பட்டது.

ஹோம் குவாரண்டின்
6வது முறையும் நடத்தப்பட்ட கொரோனா டெஸ்ட்டில் மீண்டும் நெகட்டிவ் என்று வர, ஒருவழியாக மருத்துவமனையில் இருந்து கனிகா கபூர் வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டிலேயே, தனித்து இருக்கவும், வெளியே செல்லக் கூடாது என்றும் அவருக்கு மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

அடுத்த பிரச்சனை
லக்னோ மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் வீடுகளை மாநகராட்சி சீலிட்டு, கொரோனா ஹாட்ஸ்பாட்டாக எச்சரிக்கையும் விடுத்து வருகிறது. ஆனால், பாடகி கனிகா கபூரின் வீட்டை மட்டும் ஏன்? அவ்வாறு சீல் வைக்கவில்லை என அந்த பகுதியில் வாழும் மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் நடத்தியுள்ளனர்.

அதிகாரிகள் விளக்கம்
கனிகா கபூரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், கொரோனா ஹாட்ஸ்பாட் என்று அறிவிக்கும் நிலை ஏதும் இல்லாததால், அவரது வீட்டுக்கு சீல் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், பொதுமக்கள் யாரும் பயம் கொள்ள தேவை இல்லையென்றும், மாவட்ட அதிகாரிகள் அக்கம் பக்கத்தினரை சமாதானப்படுத்தியுள்ளனர்.

அச்சம்
மாவட்ட அதிகாரிகள் என்னதான் சப்பைக் கட்டு கட்டினாலும், பிரபல பாடகி என்பதற்காக அவருக்கு சலுகைகள் வழங்குகிறார்கள் என்றே அங்கிருக்கும் மக்கள் கருதி வருகின்றனர். மேலும், தாங்களாகவே கனிகா கபூர், வீடு இருக்கும் பகுதிக்கு, செல்வதை தவிர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் 2 வழக்கு
14 நாட்கள் ஹோம் குவாரண்டின் முடிந்த பிறகு, கனிகா கபூரை விசாரிக்க காவல் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே கொரோனா வைரஸை பரப்பியதாக அவர் மீது இரு வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், ஹஸ்ரத்கன்ஜ் மற்றும் கோமதி நகர் காவல் நிலையங்களிலும் அவர் மீது மேலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications











