Cool Suresh: சாட்டையால் தன்னைத் தானே அடித்துக் கொண்ட கூல் சுரேஷ்.. மனுஷன் செம ட்ரெண்ட்ல இருக்காரு!
சென்னை: இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை இன்று அதாவது டிசம்பர் 27. இதில் பல படங்கள் வெளியாகின. இதில் இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ், எம்.எஸ். பாஸ்கர், நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட் பலர் நடித்து வெளியாகியுள்ள படம் திரு. மாணிக்கம். படத்தினைப் பார்த்த நடிகர் கூல் சுரேஷ் தன்னைச் சாட்டையால் அடித்துக் கொண்டு, படத்தின் பெயரையும் படக்குழுவினர் பெயரையும் மாறி மாறி கூறினார். இந்தச் சம்பவம் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
நடிகர் கூல் சுரேஷ் இவர், படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல படங்களை ரசிகர்களுடன் பார்த்து, தனது கருத்தினைத் தெரிவிக்கின்றார். இது படங்களில் புரோமோசனுக்கு உதவுவதாக கூறப்படுகின்றது. கடந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 7இல் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதைக் கவர்ந்தார். இதுமட்டும் இல்லாமல், பலரது மனதிற்கு பிடித்த போட்டியாளராகவும் மாறினார்.

இவர் ஒரு படத்தைப் பார்க்க வருகின்றார் என்றாலே, அவருடன் கிட்டத்தட்ட 20 இளைஞர்களையும் அழைத்துக் கொண்டு வந்துவிடுகின்றார். படம் பார்த்துவிட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கும் கூல் சுரேஷ், எதாவது ரைமிங்காக பேசினால், உடனே அவர் அழைத்து வந்த இளைஞர்கள் ஆரவாரம் செய்வதுமாக இருப்பார்கள். ஆனால் இந்த முறை கூல் சுரேஷ் கொஞ்சம் ட்ரெண்டிங்காக யோசித்து தனித்து களமிறங்கியுள்ளார்.
திரு. மாணிக்கம்: அதாவது இன்று வெளியாகியுள்ள திரு. மாணிக்கம் படத்தின் பெயரையும் படத்தில் நடித்துள்ளவர்கள், படத்தை தயாரித்தவர்கள், படத்தின் இயக்குநர் என ஒட்டுமொத்த படக்குழுவினர் பெயரையும் கூறிக்கொண்டு தன்னைத் தானே சாட்டையால் தாக்கிக் கொண்டார். இன்று காலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது எனவும், திமுக ஆட்சியை நீக்கவேண்டும் எனவும் கூறி கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன் தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொள்ளும் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினார். இது அரசியல் வட்டாரத்தில் கவனத்தினை ஈர்த்துள்ளது.
ட்ரெண்டிங்: இப்படியான நிலையில், காலை அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். மாலையில் கூல் சுரேஷ் தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டதை பலரும் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். மேலும் காலையில் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் தாக்கிக் கொண்டது இணையத்தில் வேகமாக பரவியதால்தான், அந்த ட்ரெண்ட்டை தானும் பயன்படுத்திக் கொண்டு, இவ்வாறு செய்துள்ளார் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications