பவன் கல்யாண் காலில் விழுகிறேன்.. நண்பன் சந்தானம் படத்துக்கு தடை வேண்டாம்.. கூல் சுரேஷ் எமோஷனல்!
சென்னை: சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அந்த படத்தில் இடம்பெற்ற "கிஸ்ஸா" பாடலில் பெருமாளை அவமதித்துள்ளனர் என பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும், 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், நண்பன் சந்தானத்துக்காக பவன் கல்யாணின் காலில் விழுகிறேன் என நேற்று நடைபெற்ற சினிமா விழாவில் மேடையிலேயே கூல் சுரேஷ் செய்த சம்பவமும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா தயாரிப்பில் சந்தானம், கெளதம் மேனன், செல்வராகவன், கீத்திகா, யாஷிகா ஆனந்த், கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி மற்றும் மாறன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் விமர்சகராக சந்தானம் நடித்துள்ள நிலையில், படம் வெளியாவதற்கு முன்பே ஏகப்பட்ட விமர்சனங்களில் சிக்கி படம் வெளியாகுமா? வெளியாகாதா? என்கிற அளவுக்கு சர்ச்சை வெடித்திருக்கிறது.
100 கோடி நஷ்ட ஈடு: எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் குடும்பத்துடன் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது அவரிடம் ஜனசேனா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் "கிஸ்ஸா" பாடலில் வரும் "கோவிந்தா கோவிந்தா" போர்ஷனை போட்டுக் காட்டி இதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். அதன் பின்னர், படக்குழு அந்த விவகாரத்தில் மன்னிப்பு கோராத நிலையில், 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கடவுளை கேலி செய்து: தமிழ் சினிமாவில் பல படங்களில் கடவுள்களை கேலி செய்தும் கிண்டல் செய்தும் பாடல்கள் மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் "கோவிந்தா கோவிந்தா" பாடலை பயன்படுத்தியிருப்பார்கள். பவன் கல்யாண் நடித்த சுஸ்வாகதம் படத்திலும் பெருமாள் பாடலை காதல் பாடலாக பயன்படுத்தியுள்ளனர் என சந்தானம் ரசிகர்கள் பதிலுக்கு ஷேர் செய்து வருகின்றனர்.
பவன் கல்யாண் காலில் விழுகிறேன்: அனல் மழை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்ற நிலையில், அந்த நிகழ்ச்சியில் பேசிய கூல் சுரேஷ் நண்பன் சந்தானம் ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் உள்ளவன். அவனுக்கு எந்தவொரு சங்கடத்தையும் கொடுக்க வேண்டாம். பெருமாளுக்கு எதிராக ஒருபோதும் அவன் எந்தவொரு காரியத்தையும் செய்ய மாட்டான். பவன் கல்யாண் சார் நீங்க இந்த வீடியோவை பார்த்தால், நான் உங்கள் காலில் விழுவதாக இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என மேடையிலேயே மண்டியிட்டு வணங்கி தன்னுடைய நண்பன் படத்துக்கு தடை விதிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்தார்.
தமிழர்களை திருப்பதிக்கு வரவேண்டாம் என சொல்லாதீங்க: சாமியும் பூமியும் அனைவருக்கும் சொந்தமானது. சந்தானம் படத்தின் பிரச்னை காரணமாக தமிழர்களை திருப்பதிக்கு வரவிடாமல் செய்வோம் என உங்க கட்சியினர் சொல்கின்றனர். அதெல்லாம் ரொம்ப தவறான விஷயம் வசதி இருப்பவர்கள் திருப்பதிக்கு சென்று வழிபடுவார்கள், என்னை போன்ற வசதியில்லாதவர்கள் வீட்டிலேயே பெருமாள் படத்தை வைத்து வழிபடுவோம். இது ஒரு படம் தான் இதை பெரிய பிரச்னையாக மாற்ற வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











