Cool Suresh - விளையாட்டுக்கு மாலை போட்டேன்.. பொழப்புக்கு ஓடுகிறேன்.. மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்
சென்னை: Cool Suresh (கூல் சுரேஷ்) தொகுப்பாளினிக்கு மாலை போட்டது தொடர்பாக நடிகர் கூல் சுரேஷ் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
நடிகர் சிம்புவின் தீவிர ரசிகராக இருப்பவர் நடிகர் கூல் சுரேஷ். வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து சிம்புவின் படங்களுக்கு தீவிரமாக ப்ரோமோஷன் செய்துவருபவர். அவரது பேச்சு ரசிக்கும்படியாக இருந்தாலும் சில சமயங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகக்கூடியவை. ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அவர் சிம்புவின் படங்களுக்கு ப்ரோமோஷன் செய்வதையே தனது மூச்சாக கொண்டிருந்தார். அதனையடுத்து வெளியாகக்கூடிய எல்லா படங்களுக்கும் புரோமோஷனில் ஈடுபடுகிறார்.

சரக்கு: இந்த சூழலில் மன்சூர் அலிகான் ஹீரோவாக நடித்திருக்கும் சரக்கு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூல் சுரேஷ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 'இங்கு எல்லோருக்கும் மாலை போட்டாங்க. ஆனால் ஒருத்தவங்களை மறந்துட்டாங்க. நம்மை வரவேற்பதற்காக விதவிதமான வார்த்தைகளை கண்டுபிடித்து பேசிய தொகுப்பாளினிக்கு யாராச்சும் மாலை போட்டீங்களா' என கேட்டு அருகில் இருந்த தொகுப்பாளினிக்கு மாலை போட்டார்.
மன்னிப்பு கேட்ட மன்சூர்: கூல் சுரேஷின் இந்த செயல் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரைத் தொடர்ந்து பேச வந்த மன்சூர் அலிகானிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப; சுரேஷ் செய்தது தப்புதான். அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.அதேபோல் கூல் சுரேஷும், அந்தப் பெண்ணும் நானும் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னதாகவே பேசினோம் என கூற அதற்கு அந்தப் பெண்ணோ நான் ஒருவார்த்தைக்கூட உங்களிடம் பேசவில்லையே என சொல்ல கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டார்.
கூல் சுரேஷின் மன்னிப்பு: இந்நிலையில் கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டும், நடந்த சம்பவம் குறித்தும் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் பேசிய அவர், "நேற்று சரக்கு ஆடியோ வெளியீட்டு விழாவில் சில அசம்பாவிதம் நடந்துவிட்டது. அந்த தொகுப்பாளினிக்கு மாலை போட்டேன். ஆனால் பெண்ணுக்கு மாலை போடக்கூடாதாம். கலகலப்பாக இருக்க வேண்டும் என்றுதான் செயல்படுவேன். நேற்றும் விளையாட்டுத்தனமாக செய்தேன்.விபரீதமாகிவிட்டது.
கூல் சுரேஷ் என்றாலே ஃபன்: கூல் சுரேஷ் என்றாலே ஃபன் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் அடுத்தவர்கள் முகம் சுளிக்கும் விதமாக இது ஆகிவிட்டது. அது எனக்கு தர்மசங்கடமான மனநிலையை கொடுத்துவிட்டது. அந்த பெண் உட்பட அனைவரிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த சம்பவத்துக்கும் சரக்கு படக்குழுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் சினிமாவில் பெரிதாக வரவில்லை. அதனால்தான் வெந்து தணிந்தது காடு, மாநாடு என்று பேசி என் ரூட்டை மாற்றி ஏதோ எனது பிழைப்பாக ஓடிக்கொண்டிருக்கிறேன். எது நடந்திருந்தாலும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











