ரவி மோகன் - கெனிஷா விஷயத்தில் உருளும் பிரபல நடிகரின் தலை.. ரொம்பவே புலம்புறாரே ப்பா
சென்னை: தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் தனது தோழி கெனிஷாவுடன் கலந்துகொண்டார் ரவி மோகன். தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அவர் அறிவித்தாலும் இதுவரை சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. இதனால் அவர் இன்னொரு பெண்ணுடன் வந்திருக்கக்கூடாது என்று பலரும் ரவிக்கு எதிராக கருத்து தெரிவித்துவருகிறார்கள். ஆர்த்தியும் மனம் உடைந்துபோய் அறிக்கை வெளியிட்டார். அதற்கு பிறகு எமோஷனலாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட்டும் போட்டிருந்தார். இருப்பினும் கெனிஷா மறைமுகமாக ஆர்த்தியை தாக்கி பதிவுகள் போடுவதையும் வழக்கமாக மாற்றியிருக்கிறார். இந்த விஷயத்தில் ராதிகா, குஷ்பூ உள்ளிட்ட சீனியர் நடிகைகளின் ஆதரவு எல்லாமே ஆர்த்திக்குத்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எடிட்டர் மோகனின் மகனான ரவி மோகன் பெரிதாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் தான் உண்டு தனது நடிப்பு உண்டு என்று இருந்தார். அப்படி இருக்கும்போது ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தார்கள். கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்துகொண்டிருந்தார்கள் அவர்கள். சூழல் இப்படி இருக்க கடந்த சில வருடங்களாகவே இரண்டு பேருக்குமிடையே மனஸ்தாபம் வலுத்திருப்பதாகவும்; கண்டிப்பாக பிரிந்துவிடுவார்கள் என்றும் பேச்சுக்கள் எழ ஆரம்பித்தன. அந்தப் பேச்சுக்கள்படியே கடந்த வருடம் ரவி வெளியிட்ட அறிவிப்பில் ஆர்த்தியை தான் பிரிவதாக சொல்லி அதற்கு சில காரணங்களையும் கூறினார். அதனையடுத்து பலரும் ஆர்த்தியை சரமாரியாக பேச ஆரம்பித்தார்கள்.
நீதிமன்றத்தில் வழக்கு: மேலும் ரவி மோகன் உடனடியாக நீதிமன்றத்துக்கு சென்று சட்டப்பூர்வமான விவாகரத்து பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தார். ஆர்த்தியும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகினார். இரண்டு பேரில் விவாகரத்து வேண்டும் என்று ரொம்பவே உறுதியாக இருப்பது ரவிதான் என்றே தெரிகிறது. நீதிமன்றமும் இரண்டு பேருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து வைக்க முயல்கிறது. ஆனால் பெற்றால் விவாகரத்துதான் என்பதில் ரவி விடாப்பிடியாக இருக்கிறார். இதற்கிடையே இந்த முடிவெல்லாம் தனக்கு தெரியாமலேயே எடுக்கப்பட்டிருக்கிறது. ரவியை தொடர்புகொண்டு பேச முயன்றாலும் முடியவில்லை என்று ஆர்த்தி அந்த சமயத்தில் ஒரு விளகக்த்தையும் கொடுத்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
கெனிஷாவுடன் ரவி: மேலும் கெனிஷாவுடன் தனக்கு எந்தவிதமான உறவும் இல்லை; தொழில் ரீதியான நட்பு மட்டுமே இருக்கிறது என்றும் ரவி கூறினார். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு கெனிஷாவுடன் வந்திருந்தார் ரவி. ஆர்த்தியிடமிருந்து இன்னும் முழுவதுமாக பிரியாத ரவி; எப்படி இன்னொரு பெண்ணுடன் ஒரு நிகழ்ச்சிக்கு வரலாம். இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்தார்கள். மேலும் ஆர்த்தியும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் ஒரு தாயாக மட்டுமே இப்போது குரல் எழுப்புகிறேன். எனது குழந்தைகளுக்கு பொருளாதார ரீதியிலான பாதுகாப்பு முக்கியம். அவர் தந்தை என்கிற பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். எனது காதலையும் துச்சமாக தூக்கி எறிந்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.
பெருகும் ஆதரவு: ஆர்த்தியின் அந்த அறிக்கை அனைவரது நெஞ்சத்தையும் கனக்க செய்தது. மேலும் பலரும் ஆர்த்திக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார்கள். அவர்களில் திரை நட்சத்திரங்களான குஷ்பூ, ராதிகாவும் அடக்கம். குஷ்பூதான் ரவிக்கும் ஆர்த்திக்கும் திருமணம் நடக்க முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்த விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது பேட்டியளித்த கெனிஷா, 'நான் எனது சோல்மேட்டை பார்த்துவிட்டேன். அவர் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் உணர் செய்கிறார் என்று ஓபனாக கூறினார். எனவே ரவி - கெனிஷா திருமணத்தை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் கருத்துக்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. நிலைமை இப்படி இருக்க அன்னையர் தினத்துக்கும் ஆர்த்தி தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து உருக்கமாக போஸ்ட் போட்டிருந்தார்.

கூல் சுரேஷ் பேட்டி: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் கூல் சுரேஷ் செய்தியாளர்களிடம் பல விஷயங்களை ஓபனாக பேசினார். அவர் பேசுகையில், "தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு நானும் சென்றிருந்தேன். நிறைய சினிமா பிரபலங்கள் வந்திருந்தார்கள். அரசியல் தலைவர்களும் வந்திருந்தார்கள். அப்போது கெனிஷாவுடன் ரவி மோகனும் வந்திருந்தார். என்னை பார்த்த அவர், 'என்ன கூல் எப்படி இருக்க?. ஆள் ரொம்பவே ஸ்மார்ட் ஆகிட்ட. உடம்பை குறைத்து பயங்கர ஃபிட்டாக இருக்கியே. ஹீரோவாகவும் நடிக்கிறபோல. நல்ல பண்ணு. சாப்பிட்டாயா' என்றுதான் கேட்டார். இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகம் பரவ ஆரம்பித்துவிட்டன.
அம்மா மீது சத்தியமா சொல்கிறேன்: எனது தாய் மீது ஆணையாக சொல்கிறேன். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வந்த பிறகு நேற்றிரவு 11 மணிக்கு மேல் பெங்களூரிலிருந்து ஒரு பெண் எனக்கு ஃபோன் செய்தார். அவர் என்னிடம், 'நீங்கள் ரவி மோகனுக்கு சப்போர்ட் செய்கிறீர்கள். அவர் அப்படி அவர் இப்படி. அதெல்லாம் உங்களுக்கு தெரியுமா என்று கேள்விகளாக கேட்க ஆரம்பித்துவிட்டார். நான் அவரிடமோ, 'ஏங்க நான் திருமணத்துக்கு போனேன். அவர எனக்கு முன்னரே தெரியும் என்பதால் பேசினேன். அவ்வளவுதான்' என்று கூறினேன். ஆனாலும் அந்தப் பெண் கடைசிவரை கேட்பதாகவே இல்லை. எனக்கு ரவி மோகனின் ஃபோன் நம்பரை கொடுங்க. நான் அவரிடம் பேசிக்கிறேன் என்று கூறினார்.
ஆர்த்தி நம்பரும் கேட்டார்: ரவி நம்பர் மட்டுமின்றி ஆர்த்தி நம்பரும் கொடுங்க என்று கேட்டு அவர் இஷ்டத்துக்கு திட்ட ஆரம்பித்துவிட்டார். ரவி - ஆர்த்தி - கெனிஷா ஆகிய இந்த மூன்று பேர் விஷயத்தில் உண்மையில் என்ன நடந்தது என்று உங்களுக்கும் சரி எனக்கும் சரி; அவர்களை தவிர யாருக்கும் எதுவும் தெரியாது. இது புருஷன் பொண்டாட்டி விஷயம். அதில் அவர்களது தாய், தந்தைகூட தலையிட முடியாது. அவர்களுக்குள் ஆயிரம் இருக்கும். அதெல்லாம் நாம் வெளிப்படையாக பேசவே முடியாது. அதனால் இதைப் பற்றி என்னிடம் பேசாதீர்கள். இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அந்தப் பெண்ணிடம் பேசி ஃபோனை கட் செய்துவிட்டேன். மீண்டும் ஃபோன் செய்தார். வேறு வழியில்லாமல் அவரது நம்பரை ப்ளாக் செய்துவிட்டேன்.
கடைசிவரை விடவே இல்லை: ஃபோன் நம்பரை ப்ளாக் செய்த பிறகு அந்தப் பெண்ணோ வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருந்தார். ஒரு குடும்பத்துக்குள் ஆயிரம் பிரச்னைகள் இருக்கும். கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். நாங்கசினிமாவில் இருப்பதால் எங்களைப் பற்றிய விஷயங்கள் வெளியே பளீச்சென்று. நமக்கு தெரிந்தவைகளை மட்டும் வைத்துக்கொண்டு நாமாக ஒரு முடிவுக்கு வரக்கூடாது. முதலில் ரவிக்கு கெனிஷா ஃப்ரெண்டா என்றுகூட நமக்கு தெரியாது. என்னுடன் ஒரு நான்கு தம்பிகள் வந்தார்கள் என்றால் எனக்கும் அவர்களுக்கும் வேறு மாதிரியான உறவு இருக்கிறது என்றா அர்த்தம். நான் ரவிக்கும், கெனிஷாவுக்கும் ஆதரவு தெரிவித்து பேசவில்லை. ஜெயம் ரவியோ இல்லை ராதா ரவியோ, நிழல்கள் ரவியோ ஏன் நமது ஆளுநர் ஆர்.என்.ரவியோ. எந்த ரவியாக இருந்தாலும் எல்லோரது வீட்டிலும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன.
எனது தலை உருளுது: இது ரவி மோகனின் குடும்ப பிரச்னை. அதனை அவர்களே பார்த்துக்கொள்வார்கள். தயவு செய்து எனக்கு ஃபோன் செய்து எனது தலையை உருட்டாதீர்கள். தயவு செய்து என்னை அந்தப் பிரச்னையில் கோர்த்துவிடாதீர்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











