தூய்மை பணியாளரை கௌரவித்த ரஜினி.. விட்டு விளாசிய கூல் சுரேஷ்.. இவரும் இப்படி அடிக்கிறாரே
சென்னை: சென்னையில் தூய்மை பணியின்போது கேட்பாரற்று கிடந்த 45 சவரன் நகையை காவல் துறையில் ஒப்படைத்தார் தூய்மை பணியாளர் பத்மா. அவரது அந்த செயல் பலரிடம் பாராட்டை பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் அழைத்து தங்க சங்கிலி அணிவித்தார். அதேபோல் இயக்குநரும், நடிகருமான பார்த்திபனும் பத்மாவை கௌரவித்தார். இந்நிலையில் இதுகுறித்து நடிகர் கூல் சுரேஷ் பேசியிருக்கும் விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் தூய்மை பணியாற்றும் பத்மா சில நாட்களுக்கு முன்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குப்பையில் கேட்பாரற்று 45 சவரன் நகை கிடந்தது. அதை எடுத்த அவர் நேர்மையாக காவல் துறையினரிடம் ஒப்படைத்தார். அதனையடுத்து அந்த நகை உரியவர்களிடம் சென்று சேர்ந்தது. வறுமையிலும் நேர்மையை விடாமல் கடைப்பிடித்த பத்மாவை அனைவருமே பாராட்டினார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நேரில் வரவழைத்து பாராட்டினார்.
தங்க சங்கிலி கொடுத்த ரஜினி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் தன் பங்குக்கு பத்மாவை குடும்பத்துடன் நேரில் அழைத்து அவருக்கு தங்க சங்கிலியை பரிசாக கொடுத்தார். பத்மாவும், அவரது கணவரும் தீவிரமான ரஜினி ரசிகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஜினியை நேரில் பார்ப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை என்று அந்த சந்திப்புக்கு பிறகு பெருமை பொங்க பத்மா பேசியிருந்தார். பலரும் ரஜினிக்கும் தங்களது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்தார்கள்.

பார்த்திபன் செய்த செயல்: ரஜினிகாந்த்தை தொடர்ந்து பார்த்திபனும் பத்மாவை கௌரவித்தார். அதாவது எத்திராஜ் கல்லூரியில் பத்மாவுக்கு நடந்த பாராட்டு விழாவின்போது இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தூய்மை பணியாளர் பத்மாவுக்கு புதிய காலணிகளை அணிவித்தார். அதுமட்டுமின்றி அவரது கால்களில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கினார். இது ஒருபக்கம் இருக்க ரஜினி, பார்த்திபன் பத்மாவை கௌரவித்தது இன்னொரு பக்கம் விமர்சனத்தையும் சந்தித்தது.
குரல் கொடுத்த லெனின் பாரதி: மேற்குத்தொடர்ச்சி மலை பட இயக்குநர் லெனின் பாரதி இதுகுறித்து, "தூய்மை பணியாளர்கள் தங்களது உரிமைகளுக்காக ரிப்பன் பில்டிங் வாசலில் போராடிக்கொண்டிருந்தபோதெல்லாம் எங்கே இருந்தீர்கள் ரஜினிகாந்த். உங்கள் பெருந்தன்மை வெங்காயத்தை காட்டுவதற்கு அவர்களை சீருடையோடுதான் அடையாளப்படுத்த வேண்டுமா போலி கொடை வள்ளல்களே" என்று விளாசியிருந்தார். அவரது கருத்து பெரிய விவாதமானது.
விளாசிய கூல் சுரேஷ்: தற்போது நடிகர் கூல் சுரேஷும் அவர் லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார். இந்த விஷயம் குறித்து பேசிய சுரேஷ், "45 சவரன் நகையை திருப்பி கொடுத்திருக்கிறார் பத்மா. அதற்காக நீங்கள் அவரை பெருமைப்படுத்துங்கள். ஆனால் அந்த தூய்மை பணியாளர் அக்காவுடைய சீருடையை மாத்திவிட்டு வர சொல்லி பெருமைப்படுத்த முடியாதா?. ஏன் அந்த அக்காவை தூய்மை பணியாளர் என்பதை அடிக்கடி காட்டிக்கொண்டே இருக்க வேண்டுமா?. ஏன் அந்த அக்காவுக்கு கோட், சூட் போட்டால் குறைந்து போய்விடுவீர்களா? யாராக இருந்தால் என்ன; நீங்கள் பெருமைப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஒரு புடவையை கட்டிட்டு மகாலட்சுமி மாதிரி வர சொல்லுங்கள். அதை யாருமே செய்யவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











