லோகேஷ் கனகராஜை தெரியும்.. அவர் அப்பா என்ன செய்கிறார் தெரியுமா?.. குடும்ப பின்னணி தெரியுமா?
சென்னை: லோகேஷ் கனகராஜ்தான் இப்போது தமிழ் சினிமாவின் நம்பர் 1 இயக்குநராக இருக்கிறார். ரஜினியை வைத்து அவர் இயக்கும் கூலி படத்துக்கு 50 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார். அதனை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 14ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கும் நிலையில்; அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக கலந்துகொண்டிருக்கிறார் அவர்.
ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. முதன்முறையாக ரஜினியுடன் லோகேஷ் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. அதிலும் 1000 கோடி ரூபாயை வசூல் செய்யப்போகும் முதல் தமிழ் படம் இதுவாகத்தான் இருக்கும் என ரசிகர்களும், திரைத்துறையில் ஒருதரப்பினரும் உறுதியாக சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
கூலி ட்ரெய்லர்: இதுவரை படத்திலிருந்து 3 சிங்கிள்கள் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஆகஸ்ட் இரண்டாம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. கண்டிப்பாக இதில் ரஜினிகாந்த்தின் பேச்சு தரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அன்றைய தினமே படத்தின் ட்ரெய்லரும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

50 கோடி ரூபாய் சம்பளம்: லோகேஷை பொறுத்தவரை அவர்தான் இப்போதைக்கும் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநராக மாறியிருக்கிறார். கூலியோடு சேர்த்து இதுவரை ஆறு படங்கள் மட்டுமே இயக்கியிருக்கும் அவர்; லியோவை தவிர்த்து மற்ற படங்களை ஹிட்தான் கொடுத்திருக்கிறார். லியோவும் விமர்சன ரீதியாகத்தான் அடி வாங்கியதே தவிர்த்து; வசூல் ரீதியாக இல்லை. அப்படி பார்த்தால் ஐந்து படங்களுமே ஹிட்தான். இதன் காரணமாக கூலி படத்தில் அவருக்கு 50 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் அவதாரமும்: இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் களமிறங்கவிருக்கும் லோகேஷ்; அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் படத்தின் க்ளைமேக்ஸ், இனிமேல் பாடல் ஆல்பம் உள்ளிட்டவைகளில் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. டைரக்டராக எப்படி அவர் பெரிய வெற்றியை பெற்றாரோ அதேபோல்தான் நடிகராகவும் வெல்வார் என்ற கருதப்படுகிறது.
அதில் உறுதியாக இருக்கும் லோகேஷ்: இதற்கிடையே லோகேஷ் கனகராஜின் சொந்த ஊர் கிணத்துக்கடவு என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் அவரது குடும்ப பின்னணி குறித்து பெரிதாக யாருக்கும் தெரியாது. அவரும் தனது குடும்பத்தை கேமரா கண்களில் காட்டாமல்தான் வைத்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் கோபிநாத்துக்கு அளித்த பேட்டியில் தனது தந்தை குறித்து பேசியிருக்கிறார்.
லோகேஷின் தந்தை என்ன செய்கிறார்?: அவர் அந்தப் பேட்டியில், "எனது அப்பா பஸ் கன்டக்டர். அதுமட்டுமின்றி ஒரு ஸ்டேஷனரி ஷாப் ஒன்றையும் வைத்திருந்தோம். அம்மா ஹோம் மேக்கர்தான். நாங்கள் மொத்தம் இரண்டு பசங்க. நான் 11, 12ஆம் வகுப்பெல்லாம் போர்டிங் ஸ்கூலில்தான் படித்தேன். அதற்கு பிறகு கோயம்புத்தூர் பிஎஸ்ஜி கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலஜி முடித்தேன். சென்னைக்கு வந்து எம்பிஏ படித்தேன். பிறகு வங்கியில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டு; சினிமாவுக்கு வந்திருக்கிறேன். நான் பெரிதாக குடும்பத்தை வெளியே காண்பித்ததில்லை" என்றார். அவரது இந்தப் பேட்டி ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











