வரி ஏய்ப்பு & பண மோசடி புகார்.. கூலி பட நடிகர் அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு!
கொச்சி: சவுபின் சாஹிர், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த மஞ்சும்மல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியாகி மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி ரசிகர்களையும் சிறப்பாக கவர்ந்த இந்தப் படம் மிகச்சிறப்பான வரவேற்பையும் வசூலையும் குவித்திருந்தது.
சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்தை படத்தில் நடித்திருந்த சவுபின் சாஹிர், ஷான் ஆண்டனியுடன் இணைந்து தயாரித்திருந்தார். இந்நிலையில் இந்தப்படத்திற்கு தான் 7 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் 40 சதவிகிதம் லாபத்தில் பங்கு தருவதாக கூறி சவுபின் உள்ளிட்டவர்கள் ஏமாற்றிவிட்டதாக கேரளாவை சேர்ந்த சிராஜ் என்பவர் புகார் தெரிவித்திருந்தார்.

நடிகர் சவுபின் சாஹிர்: நடிகர் சவுபின் சாஹிர் அடுத்தடுத்து தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்த மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் லீட் கேரக்டரில் நடித்திருந்த இவர், படத்தை ஷான் ஆண்டனியுடன் இணைந்து தயாரித்திருந்தார். அடுத்ததாக ரஜினிகாந்தின் கூலி படத்திலும் இவர் லீட் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக மஞ்சுமெல் பாய்ஸ் படம் 18.65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட நிலையில், இந்தப் படத்திற்காக 7 கோடி ரூபாய் முதலீடு செய்ததாக கேரளாவின் அரூரை சேர்ந்த சிராஜ் என்பவர் புகார் தெரிவித்திருந்தார்.
பண மோசடி புகார்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுகுறித்து எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் சிராஜ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து சவுபின் சாஹிர் மற்றும் ஷான் ஆண்டனியின் வங்கிக் கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து இவர்கள் மீது மரடு பகுதி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இந்தப் படத்திற்காக சிராஜ் 7 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் அவருக்கு 40 சதவிகிதம் லாபத்தில் பங்களிப்பதாக சவுபின் உள்ளிட்டவர்கள் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. படம் 100 கோடிகளை தாண்டி வசூலித்த நிலையில், சிராஜிற்கு இதுவரை ஒரு ரூபாய்கூட சவுபின் தரப்பு அளிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருமான வரித்துறையினர் சோதனை: இதையடுத்து தனக்கு மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் 47 கோடி ரூபாய் பணமோசடி செய்துள்ளதாக சிராஜ் தன்னுடைய குற்றச்சாட்டில் கூறியுள்ளார். இதனிடையே இந்த விவகாரத்தில் சிராஜின் வாக்குமூலத்தையும் வங்கி கணக்குகளையும் ஆராய்ந்த போலீசார், பண மோசடி நடந்துள்ளதை கண்டறிந்தனர். தொடர்ந்து தயாரிப்பாளர்கள்மீது கிரிமினல் மோசடி வழக்குகளை பதிவு செய்தனர். இதையடுத்து இன்றைய தினம் சவுபின் சாஹிரின் பரவா ஃபிலிம்ஸ் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அவர் வருமான வரி செலுத்துவதிலும் ஏய்த்துள்ளது தெரியவந்துள்ளது.
வரி ஏய்ப்பு: மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் பட்ஜெட் 18.65 கோடி ரூபாய் என்ற வகையில் படத்தின் பட்ஜெட் 22 கோடி ரூபாய் என்று சவுபின் சாஹிட் ஏய்த்துள்ளதும் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு சவுபின் சாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











