நம்மளோட பாதுகாப்புக்காக உழைக்கிற அவங்களுக்கு... இயக்குனர் ஷங்கர் நெகிழ்ச்சி!
சென்னை: பிரதமர் மோடி கூறியுள்ள ஊரடங்கு உத்தரவுக்கு ஒன்றிணைந்து ஆதரவு தெரிவிப்போம் என்று இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த வைரஸ்.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது.

5 பேர் உயிரிழப்பு
இந்தியாவிலும் கொரோனா, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்தாலும் 206 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் குணமாகி வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

படப்பிடிப்புகள் ரத்து
இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றை 31 ஆம் தேதி மூட உத்தர விடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள 990 தியேட்டர்கள் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டி.வி.சீரியல்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் முக்கியமான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு உத்தரவு
இந்நிலையில், நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மோடி, மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும், எனவே, வரும் 22 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை கடை பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறி இருந்தார். அத்தியாவசிய பணிகளைத் தவிர்த்து வேறு எதற்காகவும் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இயக்குனர் ஷங்கர்
இதற்கிடையே, சினிமா பிரபலங்களும் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். பிரபல இயக்குனர் ஷங்கரும், கொரோனாவைக் கட்டுப்படுத்த செயல்பட்டு வருபவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 'மனித குலம் கடினமான சூழலை தாண்டி வருவதற்காக சோதனையில் இருக்கிறது. நம் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க தொடர்ந்து உழைக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. பிரதமர் மோடி கூறியுள்ள ஊரடங்கு உத்தரவுக்கு ஒன்றிணைந்து ஆதரவு தெரிவிப்போம் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











